கனலி இணைய இதழில் வெளிவந்த நேர்காணல்
கனலி இணைய இதழ் ஜூன் 16, 2020 :
ஜி.குப்புசாமி அவர்களுடனான நேர்காணல்
கேள்வி – வணக்கம் சார். வாசிப்புக்குள் நீங்கள் வந்தது பற்றியும் அதன் பின்னணி பற்றியும் உங்கள் குடும்பப் பின்னணி பற்றியும் சிறு குறிப்பு தர முடியுமா?
பதில் – வணக்கம். வாசிப்பு என்பது எனக்கு இடையில் வந்த விஷயம் அல்ல. என்னுடைய குடும்பச்சூழல் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே வாசிப்பை நோக்கிதான் நகர்த்தியிருந்தது என்று சொல்லலாம். என்னுடைய அப்பா நல்ல வாசகர். என் அப்பாவும் தாத்தாவும் பெரிய அளவில் படித்தவர்கள் இல்லை என்றாலும் இருவருமே அந்தக் காலத்தில் SSLC படித்தவர்கள். எங்கள் தாத்தா 1930-களிலே SSLC முடித்திருக்கிறார். என்னுடைய அப்பா பள்ளியிலும் மாவட்டத்திலும் முதல் மாணவனாய்த் தேறியவர். ஆனால் அவருடைய குடும்பச்சூழல் காரணமாக கல்லூரியில் படிக்கமுடியாமல் போனது. அதனாலேயே அவருக்கு ஆங்கில வாசிப்பில் பெரும் ஆர்வம் ஏற்பட்டிருந்தது. எங்கள் அப்பா, தாத்தா இருவருமே Anglophiles. ஆரணி மாதிரியான சின்ன ஊரில் பஜாரில் கடை வைத்திருக்கும் அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் ஆங்கிலப்புத்தக வாசிப்பில் பெரும் ஆர்வம் இருந்தது என்பது மிகவும் சுவாரசியமான விஷயம்தான். அப்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு நிறைய பத்திரிகைகள் வரும். USIS- இலிருந்து SPAN வரும். ரஷ்யாவிலிருந்து சோவியத் நாடு, மாஸ்கோ நியூஸ் , ஸ்புட்னிக் இதெல்லாம் வரும். எங்கள் அப்பா TIME வரவழைத்து வாசித்துக்கொண்டிருந்தார். அடிப்படையில் அப்பாவும் தாத்தாவும் திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள். பொதுவாகவே திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு கம்யூனிசத்தின் மேலும் கொஞ்சம் ஈடுபாடு இருக்கும்.
அப்பா, தாத்தா இருவருக்குமே புனைவுகளில் ஆர்வம் கிடையாது. இருவரும் வரலாறுகள் பற்றியும் அபுனைவுகள் பற்றியும் பேசும்போதெல்லாம் விநோதமாக இருக்கும். எனக்கு அந்த வயதில் கதைகள் மேல்தான் ஆர்வம் இருந்தது. சோவியத் நாடு இதழில் வருகின்ற கதைகள் மாதிரி. எங்கள் அப்பாவோ தாத்தாவோ கதைகள் படிக்க என்னை ஊக்குவித்ததே கிடையாது. ஆனால் வாசிக்கச் சொல்வார்கள். அதுவும் ஆங்கில வாசிப்பு. என்னுடைய வகுப்பில் நன்றாகப் படிக்கும் பையன்களுக்குக் கூட ஆங்கிலம் என்பது கஷ்டமான பாடமாக இருக்கும். ஆனால் எனக்கோ அது மிகவும் ஆர்வமானதாக இருக்கும். அதற்கு எங்கள் வீட்டுச்சூழல்தான் காரணம்.
அப்பாவுடைய இங்கிலீஷ் டீச்சர் திரு. வி.எஸ்.சுந்தரமூர்த்தி முதலியார். நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது அவரிடம்தான் என்னை டியூஷன் சேர்த்துவிட்டார் அப்பா. அவர் இங்கிலீஷ் கிராமரைத் தவிர வேறு எதுவுமே நடத்தமாட்டார். Wren & Martin வைத்துக்கொண்டுதான் நடத்துவார். அந்த வயதிலேயே இங்கிலீஷில் composition எல்லாம் எழுதித் தரச்சொல்லுவார். எனக்கு கணக்கு ரொம்ப வீக். ஆனால் அவர் கணக்கே சொல்லித்தர மாட்டார். இப்படியே நான் அவரிடம் எட்டாம் வகுப்பு வரை படித்தேன். கணக்கில் நான் ஃபெயிலாக ஆரம்பித்த பிறகுதான் எங்கள் அப்பா டியூஷனையே மாற்றினார்.
எனவே ஆங்கில வாசிப்பு என்பது ரொம்பவும் இயல்பானதாகவே எனக்கு வந்துவிட்டது. எங்கள் பாட்டியும் நிறைய படிப்பார்கள். பெரும்பாலும் தொடர்கதைகள். அந்த ஊரில் அப்படிதானே இருக்கமுடியும். எனக்குப் பெரிய இலக்கிய நண்பர்களின் அறிமுகமெல்லாம் அப்போது கிடையாது. பாட்டிதான் நிறைய புத்தகங்களை கடத்திக்கொண்டுவந்து என்னிடம் கொடுப்பார். எங்கள் அம்மாவும் நல்ல வாசிப்பாளி. நான் கதைப்புத்தகம் படிப்பதைப் பார்த்தால் அப்பா திட்டுவார். அந்த வயதில் எனக்கு ஏகப்பட்ட ஆர்வங்கள் இருந்தன - eclectic என்று சொல்வோமே அதுபோல. படிப்பதில் மட்டும் இல்லாது வரையவும் செய்வேன். எங்களுடைய ட்ராயிங் மாஸ்டரே கூட பாராட்டுவார். ஓவியம் வரைவது தவிர, இசையிலும் ஆர்வம் இருந்தது. இசை, ஓவியம், இலக்கியம் போன்ற விஷயங்களில் எல்லாம் ஆர்வம் இருந்த காரணத்தால் பள்ளிப்படிப்பில் என்னால் போதிய கவனம் செலுத்த முடியவில்லை என்று சொல்லலாம்.
அப்பாவுக்கு நான் அவரைப்போலவே First rank மாணவனாக இருக்கவேண்டும் என்று பெரிய ஆசை இருந்தது. நானோ எப்போதுமே First rank எடுத்ததே இல்லை. படிப்பில் முழுக்கவனத்தை செலுத்தாமல் இப்படி படம் வரைவதிலும் பாட்டு கேட்பதிலும் கதைப்புத்தகம் வாசிப்பதிலும் கவனத்தை சிதறவிடுவதுதான் ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்க முடியாமல் இருப்பதற்கு காரணம் என்று அப்பாவும் அம்மாவும் திட்டுவார்கள். ஆனால் முரட்டுத்தனமான படிப்பாளியாய், ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்கும் பையனாக இருந்து ஒரு டாக்டராகவோ என்ஜினியராகவோ போகாமல் இருந்திருக்கிறேன் என்று எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.
நவீன இலக்கிய வாசிப்புக்குள் நான் வந்ததற்கு எது ஆரம்பம் என்று பார்க்கப்போனால்… நான் எட்டாவது படிக்கும்போது எங்கள் பாட்டி எடுத்துக்கொண்டு வந்த ஒரு புத்தகம். இந்துமதி எழுதிய மலர்களிலே ஒரு மல்லிகை என்ற புத்தகம். அது ஒரு சாதாரணமான தொடர்கதைதான். அந்தக் கதையின் கதாநாயகன் இலக்கியப் பத்திரிகை நடத்துபவன். தீவிர இலக்கிய ஆசாமி. அந்தக் கதையில் இந்த மாதிரியான தொடர்கதை மற்றும் பொழுதுபோக்கு இலக்கியங்களுக்கு எதிராக எல்லாம் அவன் பேசுவான். அந்தக் கதாநாயகிக்கும் தீவிர இலக்கிய எழுத்தில் ஆர்வம் இருக்கும். இது எனக்கு மிகுந்த சுவாரசியமாக இருந்தது. ஓஹோ.. பொழுதுபோக்கு இலக்கியம் அல்லாமல் இன்னொரு விஷயமும் இருக்கிறது போல என்று நினைத்துக் கொண்டேன். அந்தக் காலத்தில்தான் ஜெயகாந்தன் எனக்கு அறிமுகமானார். உண்மையில் ஜெயகாந்தன்தான் ஒரு தீவிர இலக்கியத்துக்கான கதவைத் திறந்துவிட்டார் என்று சொல்லலாம். அதற்கான பொறி வேண்டுமானால் இந்துமதியின் அந்த நாவலில் கிடைத்திருக்கலாம். ஜெயகாந்தன் புத்தகங்கள் அப்போது எளிதில் எல்லார்க்கும் கிடைக்கும். ஆரணி மாதிரியான சின்ன ஊரில் எங்கள் பாட்டியே ஜெயகாந்தன் புத்தகங்களை எல்லாம் எங்கெங்கிருந்தோ கடன் வாங்கிவந்து படிப்பார்கள் . நான் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும்போது ஜெயகாந்தனுடைய எல்லாப் புத்தகங்களையும் படித்து முடித்திருந்தேன்.
இன்னொரு முக்கியமான விஷயம் ஆரணியில் மட்டுமல்ல, எல்லா ஊர்களிலும் கம்யூனிச இயக்கங்கள் தீவிரமாக ஆள் பிடித்துக்கொண்டிருந்த நேரம் அது. ஆரணிக்கு ஜெயகாந்தனும் வருவார். ஜெயகாந்தன் கூட்டங்களுக்கெல்லாம் நான் போயிருக்கிறேன். ஆரணியில் இருக்கிற கம்யூனிஸ்ட் தலைவர்கள் எல்லாம் இந்த மாதிரி young prospects யாராவது இருந்தா அந்தத் தம்பிகளை எல்லாம் அழைத்துக்கொண்டு போய் அரசியல் பாடம் நடத்துவார்கள். சமூகப் பிரக்ஞை உண்டாக்கி ‘தம்பி’ யை ‘தோழர்’ ஆக்கிவிடுவார்கள். அதை மூளைச்சலவை என்றெல்லாம் சொல்லமுடியாது. அது ரொம்ப சரியான விஷயம். எங்களையெல்லாம் கூப்பிட்டு படிப்பதற்கு நிறைய புத்தகங்கள் தருவார்கள். ஆரணியில் வெங்கட்ராமன் பூங்காவில் என் நண்பர்கள் சோமு , பஜாரில் கடை வைத்திருந்த என்னுடைய கிளாஸ்மேட் ஆனந்தன், எனக்கெல்லாம் கம்யூனிச சித்தாங்களை அறிமுகப்படுத்தி நிறைய புத்தகங்கள் படிக்கக் கொடுத்தார்கள். நண்பர்கள் இரண்டு பேரும் கார்டு வாங்கும் அளவுக்கு ஆகிவிட்டார்கள். நான் இதற்கு சரிப்பட மாட்டேன் என்று அப்போதே புரிந்துவிட்டது. என்னை அந்த உள்வட்டத்துக்குள் அனுமதிக்கவில்லை.
ஆரணியில் ஒருமுறை
நூலகத்துக்குப் போனபோது அங்கு ஏற்கனவே இருந்த நூலகர் போய் புது நூலகர் வந்திருந்தார்.
அப்போது சுஜாதா கணையாழியின் கடைசி பக்கங்கள் பகுதியில் ஜி.நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’ பற்றி எழுதியிருந்தார். அதனால் அந்த நூலகரிடம்
ஜி.நாகராஜனுடைய நாளை மற்றுமொரு நாளே புத்தகம் இருக்கா என்று கேட்டேன். நான்
அதைக்கேட்டபோது SSLC விடுமுறையில் இருந்தேன். அந்த நூலகர் உனக்கு
யார் அந்த புத்தகத்தைப் பற்றிச் சொன்னது என்று கேட்டார். அதைப் பற்றிப் படித்தேன்
என்றேன். அதெல்லாம் இன்னும் லைப்ரரிக்கு வரவில்லை என்று சொல்லிவிட்டு நீ
அசோகமித்திரன் படித்திருக்கிறாயா என்று கேட்டார். எங்கேயோ கேள்விப்பட்டமாதிரி
இருந்தது. இல்லை என்றேன். அவர் உடனே தன்னுடைய காப்பி என்று சொல்லி தன்
பையிலிருந்து எடுத்துக் கொடுத்தார். ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’ புத்தகம்.
படித்துவிட்டு வா என்றார். நான்
அன்று காலையில் வாங்கிக்கொண்டு போனேன். மாலை
நூலகம் மூடும் வேளையில் போய் திருப்பிக் கொடுத்தேன். என்ன, புரியவில்லையா
என்றார். இல்லை, படித்துவிட்டேன் என்றேன். ஒரு பதினொன்றாம் வகுப்பு
படிக்கும் பையனுக்கு அசோகமித்திரனை எப்படி முழுமையாய்ப் புரிந்துகொண்டிருக்க
முடியும்? அவர்
சிரித்துக்கொண்டே சரி, நாளைக்கு நான் வேற எடுத்துட்டு வரேன் என்றார்.
விட்டல்ராவின் ஒரு புத்தகம், க.நா.சு.வின் ஒரு புத்தகம் என
எடுத்துக்கொண்டுவந்து தந்தார். அந்த நேரத்தில் எங்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக
இருந்தது சோவியத் நூல்கள். அவ்வப்போது வேனில் வருகின்ற நியூ செஞ்சுரி புத்தக
நிலையத்தின் நடமாடும் புத்தகக் கடைதான் மிகக் குறைந்த
விலையில் அற்புதமான இலக்கியங்களைக் கொண்டுவந்து சேர்த்தது. தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, செக்காவ், புஷ்கின் என் எத்தனை மாஸ்டர்கள்…
நான் ஊரீஸ் காலேஜ் போன பிறகு தீபம், கணையாழி வழியா வந்ததுதான் மற்ற வாசிப்பெல்லாம். அதே நேரத்தில் இணையாக J D Salinger, அடுத்து நான் மொழிபெயர்க்கவிருக்கிற The Brave New World எழுதிய Aldous Huxley போன்றோரை வாசித்தேன். இவர்களையெல்லாம் வாசிக்கவில்லை என்றால் உங்களை ஒரு intellectual-ஆ ஒத்துக்கொள்ளமாட்டார்கள். அதற்காகவே அதையெல்லாம் வாசிப்பது. அடிப்படையில் நான் கொஞ்சம் விளையாடுபவனும் கூட. ஸ்போர்ட்ஸில் ஈடுபாட்டோடு உள்ளவர்கள் ரொம்ப இறுக்கமாக இருக்கமாட்டார்கள். எனக்கு மிகப் பிடித்தமான எழுத்தாளரான P. G. Wodehouse, வேகமாக கதை சொல்லும் Frederick Forsyth இவர்களையும் வாசித்துக் கொண்டிருந்தேன். இவர்களை வைக்க வேண்டிய இடம் எதுவென்பதும் தெரியும். டிஸ்க்ரிப்டிவாக எழுதும் Arthur Hailey எழுத்து மிக சுவாரசியமாக இருக்கும். அந்த மாதிரியான புத்தகங்களும் வாசிப்பேன். ஆனால் என்னுடைய தேர்வு எப்போதும் சீரியஸ் புத்தகங்களாக இருக்கும்.
நான் வெறும் வாசிப்பில் மட்டும்தான் இருந்தேன். பிறகு கொஞ்சம் எழுதவும் ஆரம்பித்தேன். எல்லாரும் எழுதுவது போல கவிதைகள் . புதுக்கவிதைகள், வானம்பாடி இயக்கம் எல்லாம் உச்சத்தில் இருந்த நேரம் அது. மீரா மு.மேத்தா சாயலில் அப்போது நான் எழுதிக்கொண்டிருந்த கவிதைகள் எல்லாம் சரியான கவிதைகள் இல்லை, கவியரங்கக் கவிதைகள் மாதிரியானவை என்று எனக்கே அபிப்பிராயம் இருந்தது. அது ஒரு மாதிரியான dichotomy. அந்தக்கால நோட்டுப்புத்தகங்களைப் பார்க்கும்போது சிரிப்பாக இருக்கிறது. இப்போது சொல்லலாம் தப்பில்லை, அந்த வயதில் காதல், காதல் தோல்வி இந்த மாதிரி விஷயங்களையே எழுதிக்கொண்டிருந்தேன். பிறகு பசவய்யா, ஞானக்கூத்தன், சி.மணி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார்கள். பிரமிள் கவிதைகள் எனக்கு புரியவில்லை என்றாலும் படித்தேன். அப்போது ஆத்மாநாம் பெரிய ஆதர்சமாக இருந்தார். ஆத்மாநாம் அளவுக்கு என்னை பாதித்த கவிஞர் அந்தக்காலத்தில் கிடையவே கிடையாது. அதற்குப் பிறகு கவிதை படிக்கிற, எழுதுகிற கெட்டப்பழக்கத்தை விட்டுவிட்டேன்.
பாமுக்கிடம் கூட ஒரு நேர்காணலில் கவிதை எழுதியிருக்கிறீர்களா என்று கேட்டிருக்கிறார்கள் . ”கவிஞன் மூலமாக கடவுள் பேசுகிறார் என்று நினைக்கிறேன். கவிதை என்பது கடவுள் உங்கள் மூலமாகப் பேசுவதுதான். நானும் எவ்வளவோ முயற்சி செய்தேன். கடவுள் என்னிடம் பேசவே இல்லை. நான் எவ்வளவோ முயற்சித்து கடவுளைக் கூட்டிவந்து என் மூலமாகப் பேசவைத்தாலும் அது கடவுளின் குரலாக இல்லாமல் உரைநடையாகத்தான் இருந்தது.” என்கிறார். பாமுக்கின் மொழிபெயர்ப்பாளனும் நானும் உரைநடை மைந்தன்தான். கவிதையைப் படிக்கலாம். என்னிடமிருந்து கவிதை வராது என்பது எனக்கு தெரிந்துவிட்டது.
கேள்வி - கவிதைக்குப் பிறகு உரைநடைக்கு வந்துவிட்டீர்கள் சரியா?
பதில் – ஆமாம். அப்போதும் கூட பெரிதாக நான் ஒன்றும் எழுதியது கிடையாது. சில கதைகள் எழுதியிருக்கிறேன். கணையாழிக்கு அனுப்பியிருக்கிறேன். ஆனால் வாசிப்பதில் இருக்கும் ஆர்வம் எனக்கு எழுத்தில் இல்லை. உண்மையான காரணம் அதுதான். ஏனென்றால் நாம் வாசிக்கும் புத்தகங்களில் இருக்கும் வாழ்க்கை, அந்த எழுத்தாளர்களின் அனுபவம் அந்த மாதிரி எதுவுமே இல்லாமல் மிகவும் சௌகரியமான ஒரு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் என்னிடமிருந்து என்ன ஒரு பெரிய இலக்கியப் படைப்பு வந்துவிட முடியும்?
உண்மையில் நான் ரொம்ப cozy-ஆகத்தான் வளர்ந்திருக்கிறேன். என் வாழ்க்கையில் ஒரு பேரிலக்கியம் படைக்கும் அளவுக்கு நான் எதையும் பார்க்கவே இல்லை. எதுவும் நிகழவே இல்லை. வண்ணதாசன் சொல்வது போல என் வேட்டியின் நுனி கூட முள் பட்டு கிழிந்திருக்காது. அவ்வளவு சௌகரியமாக இருப்பவர்களிடம் இருந்து இலக்கியம் வராதா என்றால் அதுவல்ல விஷயம். பேரிலக்கியம் படைத்தவர்கள் எல்லாமே வாழ்க்கையில் அடிபட்டவர்கள்தானா என்றால் அப்படி ஒன்றும் கிடையாது. தல்ஸ்தோய் பிரபு வாழ்க்கை வாழ்ந்தவர். அதனால் அப்படி எதுவும் இல்லை. ஆனால் அதுவும் ஓரளவு இருக்கிறது. நீங்கள் வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறது. என்னைச் சுற்றி இத்தனை அவலங்கள் இருக்கும்போது என்னுடைய வாழ்க்கையைப் பற்றி மட்டும்தான் எழுதவேண்டும் என்று கிடையாது. என்னைச் சுற்றி எவ்வளவோ அவலங்கள் இருக்கின்றன. என் நண்பர்களிடம் இருக்கின்றன. மிகச் சிறிய வயதிலேயே என்னுடைய நண்பர்களிடம் இருந்த ஜாதி என்னும் விஷயம்… அதெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிற விஷயங்கள்தானே. அதையெல்லாம் அவர்களே எழுதவேண்டும் என்று இல்லை. நான் எழுதியிருக்கலாம். ஆனால்.. எனக்கு படிப்பதில் இருந்த ஆர்வம் எழுதுவதில் இல்லை. அதுதான் உண்மை. நான் ஒரு இயல்பான எழுத்தாளன் கிடையாது என்பது எனக்கு ஆரம்பத்திலேயே புரிந்துவிட்டது.
கேள்வி - இதிலிருந்து எங்கள் அடுத்த கேள்வி எழுகிறது. வாசிப்பிலிருந்து எழுத வந்தீர்கள். முதலில் கவிதை எழுதினீர்கள். அது திருப்திகரமாக இல்லை. பிறகு உரைநடைக்கு வந்துவிட்டீர்கள். உரைநடைக்கு வந்த பிறகு உங்களுடைய படைப்புகளை அனுப்பியிருக்கிறீர்கள். அவை வெளியிடப்படவில்லை. எங்களுடைய கேள்வி என்னவெனில் அதிலிருந்து மொழிபெயர்ப்புக்கு வந்ததன் பின்னணி என்ன?
பதில் - நான் மொத்தமாக ஐந்து சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். இரண்டு நாவல் எழுத ஆரம்பித்து நான்கைந்து அத்தியாயங்களுடன் நிறுத்தியிருக்கிறேன். இதெல்லாம் ஒரு கணக்கே கிடையாது. எல்லாமே 87-உடன் முடிந்துவிட்டது. 82-இல் நான் ஊரீஸ் காலேஜ் படிக்கும்போது எழுதிய ஒரு சிறுகதை அடுத்து நான் எம்எஸ்ஸி படிக்கும்போது என்னுடைய காலேஜ் மேகசினில் வந்தது. அவ்வளவுதான். அதற்குப் பிறகு நான் எதுவும் எழுதவில்லை. வாசித்துக்கொண்டேதான் இருந்தேன்.
மொழிபெயர்ப்புக்கு வந்தது மிகவும் பின்னாளில்தான். சரியாக சொல்லவேண்டும் என்றால் 2002. 90-இல் நான் வேலையில் சேர்ந்தேன். 92-இல் எனக்குத் திருமணமானது. அதன்பிறகு என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. புற்றுநோய் என்று கண்டறியப்பட்டது. சிகிச்சை அது இது என்று போனது. என் மனைவி 2000-இல் காலமானார். அந்தக் காலக்கட்டம் மிகவும் மோசமான காலக்கட்டம். முதலில் நான் ரொம்ப சௌகரியமாக வசதியாக இருந்தேன் என்று சொன்னேன் இல்லையா அதற்கு முற்றிலும் நேர்மாறான பெரும் கொந்தளிப்பான காலக்கட்டம். மகனைத் தனியாக வளர்த்தது மாதிரியான பல விஷயங்கள். ஆனாலும் இந்தப் பிரச்சனைகளுக்கு மத்தியிலும் படித்துக்கொண்டே இருந்தேன். படம் வரைவதைக் கூட விட்டிருந்தேன். ஆனால் வாசித்துக் கொண்டிருந்தேன். வாசிப்பு மட்டும் இல்லையென்றால் நான் நொறுங்கிப் போயிருப்பேன். தொடர்ந்து படித்துக்கொண்டு இருந்தேன். நான் ஏற்கனவே இரண்டு மூன்று நேர்காணலில் சொன்னதுதான். அந்த சமயத்தில் என் நண்பர்கள் குறிப்பாக திருவண்ணாமலை பவா. அவர்தான் என்னை மடைமாற்றிவிட்டவர் என்று சொல்லலாம். நான் வெகு இறுக்கமாக என் இயல்புக்கு மாறாக இருந்த அந்தக் காலக்கட்டத்தில் என்னை அந்த வேதனைச்சுழலிலிருந்து வெளியே கொண்டுவருவதற்கு அவரும் ஷைலஜாவும் நிறைய முயற்சி செய்திருக்கிறார்கள். அவர்கள் நடத்துகிற கூட்டத்தில் எழுத்தாளர்களின் பேச்சுகளைப் பதிவு செய்த ஒலிநாடாக்களைக் கொடுத்து இதையெல்லாம் புத்தகமாகப் போடப்போகிறோம். கட்டுரை எழுதிக்கொடுங்கள் என்பார்கள்.
2002-ல் நான் மொழிபெயர்ப்பாளன் ஆனதற்குக் காரணம் நம்முடைய பாரதப் பிரதமர் மோடி. அவருக்கு நான் நன்றி சொல்லியாகவேண்டும். இன்று தேதி பிப்ரவரி 28 இல்லையா? பிப்ரவரி 27 எனக்கு மிக முக்கியமான நாள். பிப்ரவரி 27, 2000-இல் தான் என்னுடைய மனைவி காலமானார். 2002 பிப்ரவரி 27-இல் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம். அதற்குப் பிறகு அங்கு நடந்த கோரம் எல்லாருக்கும் தெரியும். 2002 மே அவுட்லுக் இதழில் அருந்த்தி ராயின் கட்டுரை ஒன்று வெளியானது.
திருவண்ணாமலையில் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கமும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும் சேர்ந்து மத நல்லிகணக்கக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு பண்ணியிருந்தது. அதற்கு கே என் பணிக்கரை அழைத்திருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் கே என் பணிக்கர் எழுதிய கட்டுரைகளை எல்லாம் மொழிபெயர்த்து சின்னப் புத்தகமாக வெளியிடலாம் என்று பவா, சந்துரு இவர்களெல்லாம் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது நான் அவுட்லுக்கில் வந்திருந்த அருந்த்தி ராயின் கட்டுரையைப் பரிந்துரைத்தேன்.
அருந்ததி ராயுடைய அந்தக் கட்டுரையை மொழிபெயர்க்கலாம் என்று தோன்றியதும் சட்டென்று நானே அதை மொழிபெயர்க்க ஆரம்பித்துவிட்டேன். அது எப்படி நடந்தது என்று தெரியவில்லை. காரணம் அருந்ததி ராய் அதற்குள் என் மனசுக்குள் மிகவும் நெருக்கமாகிவிட்டார். நான் சொன்னேன் அல்லவா, என் மனைவி உடல்நிலை மோசமாக இருந்த அந்த சமயத்தில் 97-ல்தான் God of Small Things புத்தகம் வெளியானது. புக்கர் பரிசு கிடைத்தது. பிறகு திரும்பிய பக்கமெல்லாம் அருந்ததி ராய் புகைப்படங்கள், அருந்ததி ராய் நேர்காணல்கள், அவர் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள் எல்லாம் இருந்தன. 98- ஆரம்பத்தில்தான் நான் அந்தப் புத்தகத்தை வாங்கினேன். அதை நான் வாசித்தவுடனேயே என்னை உள்ளே இழுத்துக்கொண்டது. ஏன் என்று சொன்னால் உங்களுக்கு வேடிக்கையாக இருக்கும். இதை நான் அருந்ததி ராயிடம்கூட சொல்லியிருக்கிறேன், ‘உங்கள் நாவலை உலகத்திலேயே அதிக முறை படித்தவன் நானாகத்தான் இருப்பேன்’ என்று.
98-இல் அந்த நாவலைப் படித்தபோது அந்த நாவல் எப்படி என்னைத் தாக்கியது என்றால் It was like a bolt from the blue. அந்த நாவலில் சொல்லப்படுகிற கேரளா, கேரள கிராமம் அவற்றையெல்லாம் நான் பார்த்தது கிடையாது. அந்த நாவலில் வருகிற சிரியன் கேத்தலிக் குடும்பம் எனக்கு அறிமுகம் இல்லாத குடும்பம். வீட்டிலேயே இங்கிலீஷ் பேசும் ஒரு குடும்பம். அதுவும் எனக்குக் கிடையாது. ஆனாலும் பாமுக் நாவலில் வருவது போல் எனக்கென்னவோ இணையாக இன்னொரு உலகம் இருப்பது போலவும் என்னுடைய இரட்டை ஒருத்தன் அந்த நாவலில் வருவது போலவும் இருந்தது. அந்த நாவலில் வரும் எஸ்தப்பன் என்னுடைய alter ego மாதிரியே இருந்தான் . என்னுடைய கதையை அருந்ததி ராய் எழுதியிருப்பது போலவே தோன்றியது. அந்தக் கதையில் வருகிற ஒரே ஒரு சம்பவம் கூட என் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டது இல்லை. ஆனால் அந்த எஸ்தா எனக்கு ரொம்ப நெருக்கமானவனாக என்னுடைய ஒரு பகுதியாகத் தெரிந்தான். திரும்பத் திரும்ப அந்த ஒரு நாவலையே 98 -99 பாதி வரைக்கும் படித்துகொண்டிருந்தேன். எப்படி என்றால் முதல் பக்கத்திலிருந்து கடைசிவரைக்கும் நாலைந்து தடவை படித்திருப்பேன்.புக்மார்க் எல்லாம் இல்லை. அப்படியே வைத்துவிட்டுப் போவேன். அலுவலகத்திலிருந்து வந்ததும் ஏதோ ஒரு பக்கத்தைத் திருப்புவேன். இரவுணவு வரை வாசிப்பேன். பிறகு மூடிவைத்துவிடுவேன். இப்படியே இந்தப் புத்தகத்தையே தொடர்ந்து நான் படித்துக் கொண்டிருந்தேன். என் மனைவிக்கு இது ரொம்ப விநோதமாக இருந்தது. “நீங்க இன்னும் இந்தப் புத்தகத்தை படிச்சு முடிக்கலையா?” என்று கேட்டார்கள். இல்லை, நான் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டிருக்கிறேன் என்றேன். “ஏன், புரியலையா?” என்று கேட்டார்கள்.
கேள்வி - அந்த நூலகர் அசோகமித்திரன் புத்தகம் பற்றிக் கேட்டமாதிரியே புரியலையா என்று கேட்டிருக்கிறார்கள்.
பதில் - ஆமாம். அந்தப் புரியலையா வேறு, இந்தப் புரியலையா வேறு. இப்படி அருந்ததி ராயுடைய அந்த நாவல் என் உடலின் ஒவ்வொரு செல்லிலும் ஊறிப்போயிருந்தது. அருந்ததி ராயுடைய நடை, அந்த நடையில் இருக்கிற கிண்டல், அதிலிருக்கிற உக்கிரம் எல்லாமே எனக்குள் பூரணமாக ஊறிப்போயிருந்தது. அதனாலேயே அந்த அவுட்லுக் கட்டுரை என்னை தனக்குள் இழுத்துக்கொண்டது. அந்தக் கட்டுரையை மொழிபெயர்க்குமுன் ஒரு பத்தி கூட நான் மொழிபெயர்த்திருக்கவே இல்லை. ஒரு ஞாயிறு மாலை ஆரம்பித்தேன். அப்போது நான் திருவண்ணாமலையில் கலக்டரேட்டில் ஆடிட்டிங்கில் இருந்தேன். திங்களன்றே முடித்துவிட்டேன். முடித்துவிட்டு பவாவிடம் கொடுத்தேன். சி. மோகன் அவர்களுடைய பிரஸ்ஸில் கொடுத்து சிறிய புத்தகமாக வெளியானது. அதுதான் என்னுடைய முதல் மொழிபெயர்ப்பு. அந்த மொழிபெயர்ப்பு எனக்குள் ஒரு பெரிய கதவைத் திறந்துவிட்டிருந்த்து.
ஏனென்றால் அப்போது என் மனைவி இறந்து ஏறக்குறைய இரண்டு வருடங்கள் இருக்கும். என் மன இறுக்கம் எல்லாமே இந்த மொழிபெயர்ப்புப் பணியின்போது விடுபட்டது. ஏனென்றால் நீங்கள் இன்னொரு எழுத்தாளரரின் சுயத்துக்குள் போய் நீங்கள் மொழிபெயர்ப்பு செய்யும்போது நீங்கள் இன்னொருவராக மாறிவிடுகிறீர்கள். அந்த நேரத்தில் குப்புசாமி என்ற இந்த சுயத்திலிருந்து விலகியிருப்பதை மிகப்பெரிய விடுதலையாக உணர்ந்தேன். நீங்கள் மொழிபெயர்ப்பு செய்யும்போது நீங்கள் நீங்களாக இருப்பதில்லை. அருந்ததி ராயின் எழுத்தை மொழிபெயர்ப்பு செய்யும்போது நீங்கள் தமிழில் எழுதும் அருந்த்தி ராயாகவே மாறிவிடுகிறீர்கள். அப்படைப்பின் படைப்பாளியாகவே உங்களை நீங்கள் உருவகப்படுத்திக் கொள்கிறீர்கள். என்னிடமிருந்து நானே விலகி இருப்பது பெரிய நிவாரணியாக இருந்த்து. அருந்ததி ராயை முடித்தவுடனே மறுபடியும் இந்த குப்புசாமி என்ற சோகமான சுயத்துக்குள் போக எனக்கு விருப்பமில்லை. எனக்குப் பிடித்தமான எழுத்தாளர்கள் நிறைய பேர் இருந்துகொண்டுதானே இருக்கிறார்கள். Kazuo Ishiguro-வின் village of dark என்னும் சிறுகதை New Yorker-ல் வெளிவந்திருந்தது. அதை மொழிபெயர்த்தேன். அருந்ததி ராயிலிருந்து முற்றிலும் வேறு மாதிரியான எழுத்தாளர். எனக்கு மிகமிகப் பிடித்தமான எழுத்தாளர் Julian Barnes. ரொம்ப பிரபலமான எழுத்தாளர். நாவல்தான் பிரதானமாக எழுதுவார். Granta பத்திரிகையின் இசைச் சிறப்பிதழில் அவருடைய Silence என்னும் சிறுகதை வெளிவந்திருந்தது. நிசப்தம் என்னும் அக்கதை எனக்கு மிகவும் பிடித்தமானது. அதை மொழிபெயர்த்தேன். மற்றொரு கதையையும் மொழிபெயர்த்தேன். அது அப்படியே பற்றிக்கொண்டுவிட்டது. அந்த நேரத்தில் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டது உண்மையாகவே என்னை நானே ஆற்றுப்படுத்திக்கொள்ளவும் அமைதிப்படுத்திக்கொள்ளவும்தான். அப்போது இருந்த என்னுடைய சூழலில் நான் மட்டும் மொழிபெயர்ப்பில் ஈடுபடாமல் இருந்திருந்தால் உள்ளே இருக்கும் அழுத்தம் தாளாமல் என்றைக்காவது வெடித்திருப்பேன். மொழிபெயர்ப்பு என்ற ஒரு வழியை எனக்குக் காட்டிவிட்டதற்காக பவாவுக்கு என் நன்றி
கேள்வி – மொழிபெயர்ப்பின் போது பாமுக் உடன் பல வருடங்களாக இருந்திருக்கிறீர்கள். என் பெயர் சிவப்பு, வெண்ணிறக்கோட்டை, பனி இப்படிப் பல. தொடர்ந்து பாமுக்காகவே மாறி தமிழ் சூழலில் இருக்கும்போது உங்களுடைய மனநிலை மற்றும் அனுபவம் எப்படி இருந்தது.
பதில் – பாமுக் என்னுடைய மிகப் பிடித்தமான எழுத்தாளர் என்று சொல்வதே குறைமதிப்பீடுதான். உண்மையில் நான் அவரை ஆராதிக்கிறேன். பாமுக்கின் My name is Red பற்றி எஸ். ராமகிருஷ்ணன்தான் முதலில் எனக்குச் சொன்னார். அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வந்தது 2001 கடைசியில் இருக்கும் என்று நினைக்கிறேன். அப்போது ஆரணிக்கு வந்த ராமகிருஷ்ணன் தமிழுக்கு வந்தாகவேண்டிய ஒரு நாவல் என்று சொன்னார். அவர் சொன்னதன் பிறகு, அடுத்த முறை நான் சென்னை போனபோது ஹிக்கின்பாதம்ஸில் அந்தப் புத்தகத்தை வாங்கினேன். படிக்கும்போது எனக்குத் தோன்றிய முதல் விஷயம் தமிழில் இதற்கு உதாரணம் காட்டக்கூடிய மாதிரி இதுவரைக்கும் எந்த நாவலுமே வந்ததில்லை என்பதுதான்.
அதற்குள் நானும் மொழிபெயர்ப்புகளில் இறங்கியிருந்ததால் பாமுக்கை கண்டிப்பாக மொழிபெயர்த்தே ஆகவேண்டும் என்று உள்ளே ஓடிக்கொண்டே இருந்தது. காலச்சுவடு கண்ணனிடம் இந்த நாவலுக்கு உரிமை வாங்கவேண்டும் என்று சொல்லியிருந்தேன். My Name is Red பற்றி நான் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்ததால் திலகவதி மேடமும் அதற்கான உரிமை வாங்க முயற்சி செய்தார்கள். அவர்களால் முடியவில்லை. எனக்கு எப்படியாவது உரிமை வாங்கி My Name is Red-ஐ தமிழில் மொழிபெயர்க்கவேண்டும் என்பது என் ஆசை. அப்போது பாமுக்குக்கு நோபல் எல்லாம் வரவே இல்லை. பாமுக் பற்றிய ஒரு அறிமுகக் கட்டுரையை அமிர்தாவில் நான் எழுதியிருந்தேன். அதன் பிறகு கண்ணன் 2005-2006-இல் முயற்சி செய்தார். முதல் முயற்சியில் அவருக்கு கிடைக்கவில்லை. 2006-ல் பாமுக்குக்கு நோபல் பரிசு கிடைத்தது. மறுபடியும் அவர் முயற்சி செய்து அந்த உரிமையை வாங்கிக் கொடுத்தார்.
நான் மிகவும் ரசித்து லயித்து செய்த மொழிபெயர்ப்பு அது. அதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் அருந்ததி ராயின் கதையில் வரும் எஸ்தப்பன் பற்றி சொன்னேன் இல்லையா, அந்த எஸ்தப்பன் ஏதோ ஒரு வகையில் என்னுடைய சுயத்தின் ஒரு பகுதி மாதிரி இருக்கிறான் என்று சொல்லியிருந்தேன். ஒரான் பாமுக் என்ற அந்த எழுத்தாளர், அவருடைய பார்வை, ஒரு கதையை கட்டமைக்கிற விதம், அவர் சொல்லுகின்ற விஷயம் இவை எல்லாமே என்னுடைய உண்மை இயல்புக்கு வெகு அருகில் இருக்கின்ற விஷயம். ஏன் என்றால் என்னுடைய இயல்பை மாற்றி பாமுக்கை அறிந்துகொள்ளவேண்டிய அவசியமே எனக்கு இல்லை. பாமுக் ஒரு நாவலை எப்படி கட்டமைக்கிறார், எப்படி எழுதுகிறார் என்று சொல்கிறார். பல தமிழ் எழுத்தாளர்கள் கூட நாவல்கள் தங்களிடமிருந்து இயல்பாய் வெளிவரும் என்பார்கள். ஆனால் பாமுக் அப்படியெல்லாம் சொல்லவில்லை.
ஒரு நாவலை ஒரு
கட்டிடக்கலைஞன் போல முதலில் இருந்து கடைசி வரை எழுதாமலேயே உள்ளுக்குள்ளேயே
மிகச்சரியாக வடிவமைத்து வைத்துக்கொண்டு அதற்குப் பிறகே அவர் எழுதுவார். ஆனால்
எழுதும்போது ஒரு அவுட்லைன் மட்டும்தான் அவருக்குள் தீர்மானமாக இருக்கும்.
எழுதும்போது அந்த எழுத்து எழுத்தாளரை தானாகவே அழைத்துச்சென்றுவிடும். எழுத்து
என்பது ஒரு மாயசக்தி. ஆனாலும் ஒரு எல்லை உண்டல்லவா, அதற்குள் எப்படி வேண்டுமானாலும் சுதந்திரமாகப்
போகலாம். ஒரு எழுத்தாளர் இப்படிதான் எழுதவேண்டும் என்று கிடையாது. பாமுக் ஒரு
நேர்காணலில் சொல்வார், “ஒரு கேரக்டரை ஒரு அறைக்குள் அனுப்புகிறேன்.
அவன் நேரே போவானா, வலப்பக்கம் திரும்புவானா? இடப்பக்கம்
திரும்புவானா என்று எனக்குத் தெரியாது. என் கை தானாக எழுதிக்கொண்டே போகும். என் கை
எழுதிக்கொண்டே போவதற்கு நான் பொறுப்பு கிடையாது.” இது பெரும்பாலும் எல்லா எழுத்தாளர்களும்
சொல்லும் ஒரு விஷயம்தான்.
படைப்பாற்றல் இருக்கிறதல்லவா, அந்த செய்முறையை நீங்கள் கவனித்தால் மிகவும் சுவாரசியமாக இருக்கும். அது எனக்கு மிகுந்த கவர்ச்சிகரமாக இருந்தது. பாமுக் ஒரு கனவுலகவாசி கிடையாது. “எனக்கு ஒன்றுமே தெரியாது. என்னுடைய சுயநினைவில்லாமல் கதை என்னிடமிருந்து ஆற்றொழுக்காக வருகிறது” என்று அவர் சொல்லவில்லை. அவரிடம் ஒரு தீர்மானம் இருக்கிறது. இந்த விஷயத்தை இப்படி சொல்லவேண்டும் இந்தக் கதாபாத்திரம் இப்படிதான் இருப்பான் என்ற தீர்மானமான நிர்ணயம் இருக்கிறது. அந்த நிர்ணயத்துக்குள் அவர் மிக சுதந்திரமாக தன் படைப்பாற்றலை வெளிப்படுத்துகிறார். இது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம்.
கதைசொல்லலில் ஒரு ஒழுங்குமுறை உண்டு. மற்ற எழுத்தாளர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அந்த ஒழுங்குமுறை பாமுக்கிடம் மிகச்சரியாக இருக்கும். ஒழுங்குமுறை என்பது படைப்பாற்றலுக்கு எதிரானது என்று யாராவது சொன்னால் அவர்களை பசித்த புலி தின்னட்டும். அதை விடுங்கள். எனக்கு அந்த ஒழுங்குமுறை மிக முக்கியமானதாகப் படுகிறது. அந்த ஒழுங்குமுறைக்கு உள்ளே ஒரு சுதந்திரம் இருக்கிறது. பாமுக்கின் எல்லா எழுத்திலும் நான் பார்க்கிற மிகப்பெரிய விஷயம், சுதந்திரத்தோடு கூடிய அந்த ஒழுங்குமுறை.
நான் ஒரு ஓவியன். My Name is Red நாவலும் ஓவியத்தைப் பற்றியதுதான். ஆனால் அது miniature painting எனப்படும் நுண்ணோவியம். Miniature painiting என்பது ஆட்டமன் கலாச்சாரத்தைப் பற்றியது. கலைஞனுடைய சுதந்திரத்தை அரசியல், மதம் இவையெல்லாம் எந்த அளவுக்குக் கட்டுப்படுத்துகின்றன? கட்டுப்படுத்துமா? கட்டுப்படுத்தும் நேரத்தில் கலைஞனின் பங்கு என்ன? கலைஞனுக்கும் அவன் படைக்கிற படைப்புக்கும் இடையில் வேறு யாருக்காவது இடம் இருக்கிறதா? இருக்கிறது, இல்லை இரண்டுமே இருக்கிறது. அப்படிதான் இருக்கிறது இந்த உலகம்.
இஸ்தான்புல் என்ற ஒரு பகுதி இருக்கிறதே அது, மிகச்சரியாக கிழக்குக்கும் மேற்குக்கும் நடுவில் இருக்கும் ஒரு விஷயம். நேரெதிர் கலாச்சாரங்களுக்கு இடையில் இருக்கும் ஒரு விஷயம். ஆட்டமன் சாம்ராஜ்யம் செழித்தோங்கிய பதினாறாம் நூற்றாண்டில் பல பேர் உலகத்தின் மையமே இஸ்தான்புல்தான் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். உலகத்துக்கு ஒரு மையம் என்பதே கிடையாது என்பதுதான் உண்மை. பிறிதொன்று என்பது முக்கியமான விஷயம். எப்போதும் ஒரே ஒரு மையப்புள்ளியில் இருந்து உலகம் இயங்குவதே கிடையாது. அதற்கு ஏராளமான மையப்புள்ளிகள் உண்டு.
ஆட்டமன்
சாம்ராஜ்யம் சிதறுகிறது. அது சிதறுவதற்குப் பல காரணங்கள். அதிகாரக்குவிப்பு ஒரு
முக்கியமான காரணம். அந்தப்பக்கம் வெனீஸிலிருந்து வருகிற மேலைக் கலாச்சாரம், இந்தப்பக்கம்
ஆசியாவிலிருந்து வருகிற கீழைக் கலாச்சாரம் இந்த இரண்டு கலாச்சாரங்களும் ஆன்மீகத்தை
வெவ்வேறு விதமாகப் பார்க்கிற கலாச்சாரங்கள். அதாவது மேலோட்டமாக. ஆன்மீகம் என்பதை
நீங்கள் தத்துவமாகப் பார்த்தாலும் சரி, அல்லது வழிபாட்டு முறைகளாப் பார்த்தாலும் சரி.
இஸ்லாமியக் கலாச்சாரப்படி உருவ வழிபாடு, உருவம் இவற்றில் அவர்களுக்குத் தீர்மானமான பல கருத்துகள் உண்டு. அதனால் இந்த மினியேச்சர் பெயிண்டிங்கின் பரப்பார்வை (perspective) எல்லாமே டாப் ஆங்கிளில்தான் இருக்கும். இறைவன் மேலே இருந்து கீழே உலகத்தைப் பார்க்கிற அதே மாதிரிதான் நீங்கள் படம் வரையவேண்டும். மினியேச்சர் பெயிண்டிங்கில் கேமராவை தரையில் வைத்து நீங்கள் பார்ப்பது போல கோணம் கிடையாது. ஒரு அரண்மனை என்றால் மேலே இருந்து பார்ப்பது போலத்தான் இருக்கும். ஆனால் ஒரு கோணத்தில் பார்க்கும்போது ஒரு வீடு, சுவர் எல்லாம் இருக்கும். அந்த சுவருக்கு உள்ளே இருப்பவர்களையும் வரைந்திருப்பார்கள். அவர்கள் உள்ளே என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்றும் வரைந்திருப்பார்கள். ஆனால் இந்த வெனீஷியன் பெயிண்டிங் அதாவது மேற்கத்தியக் கலாச்சாரத்தின் ஓவியங்கள் எல்லாம் மிக யதார்த்தமான ஓவியங்களாக இருக்கும். ஒரு முகத்தைப் பார்த்து அப்படியே வரைவதாக இருக்கும். ஆனால் மிகவும் பொருள்வாய்ந்த இந்த நுண்ணோவியங்களை வரைபவர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட அந்த ஓவியமுறை அதிர்ச்சிகரமாக இருக்கிறது. நாமும் ஓவியர்கள் என்று சொல்லிக்கொள்கிறோம். ஆனால் நம்மால் இப்படி வரையமுடியவில்லையே என்று புலம்புகிறார்கள். அதனால் அந்த சுல்தான் அந்த நுண்ணோவிய ஓவியர்களுக்கு மேற்கத்திய ஓவியங்கள் வரைவதற்கு அனுமதி அளிக்கிறார், பெரிய ஓவியத்தொகுப்பொன்றை உருவாக்கும் பொருட்டு. அதில் ஏற்படும் பிரச்சனைகள்தான் இந்த நாவல். ஓவியத்தைப் பற்றி இவ்வளவு நுணுக்கமாகப் பேசுவதே எனக்கு சுவாரசியமாக இருந்தது. ஒரு குதிரையை வரையும்போது அவனுடைய கை விரல்கள் எவ்வளவு சுதந்திரமாக குதிரையின் பிடரி பறப்பதையெல்லாம் வரைகிறான் என்று வாசிக்கும்போது மிகுந்த சந்தோஷமாக இருந்தது. ஏனெனில் வரையும் கைகளுக்குதான் அந்த சந்தோஷம் புரியும்.
My Name is Red வந்தவுடன் அடுத்து வரும் பாமுக்கின் புத்தகங்கள் சிலவற்றுக்கு உரிமை வாங்கவேண்டுமென்று கண்ணனை நச்சரிக்க ஆரம்பித்தேன். சரி, ஏதேனும் நான்கு புத்தகங்களைச் சொல்லுங்கள் என்றார். Snow, Istanbul, White castle, The Black book இந்த நான்கின் உரிமையையும் வாங்கிவிட்டார். அவர் வாங்கும்போது ஒவ்வொரு புத்தகத்தையும் மொழிபெயர்க்க அந்த ஏஜன்ட் கொடுத்த கால அளவு ஒன்றரை வருடம். ஏனெனில் ஒன்றரை வருட கால அளவில் நான் My name is Red–ஐ முடித்துவிட்டேன். அந்தக் கணக்குப்படி White castle சின்ன புத்தகம். அதை சீக்கிரம் முடித்துவிடலாம். ஏனெனில் அது பாமுக்கின் நாவலில் எனக்கு மிகவும் பிடித்தமான நாவல். அடுத்து இஸ்தான்புல் கொஞ்சம் பெரிய புத்தகம். நிறைய படங்கள் எல்லாம் இருக்கும். அதையும் சீக்கிரம் முடித்துவிடலாம் என்றெல்லாம் கணக்குப்போட்டு கண்ணனிடம், “ஒரு புத்தகத்துக்கு ஒன்றரை வருடம் கணக்கில் ஆறு வருடங்களில் நான்கு புத்தகத்தையும் முடித்துவிடுவேன்’ என்று வாக்கு கொடுத்துவிட்டேன். அவரும் என்னை நம்பி உரிமையை வாங்கிவிட்டார். ஆனால் நான் Snow-ஐ மொழிபெயர்க்க அதிக காலம் எடுத்துக்கொண்டுவிட்டேன். அது அப்படியே இழுத்துக்கொண்டே போய்விட்டது. அதற்கடுத்து இஸ்தான்புல் மொழிபெயர்க்கவும் காலம் அதிகமாகிவிட்டது. ஆறுவருடங்களில் மூன்று புத்தகங்கள்தான் என்னால் முடிக்க முடிந்தது.
தொடர்ச்சியாக பாமுக்கின் எழுத்துகளில் வாழ்ந்துகொண்டிருப்பதில் ஒரு பெரிய அழுத்தம் இருந்தது. இதிலிருந்து கொஞ்சம் வெளியே வந்து இளைப்பாற வேண்டும்போல் இருந்தது. உளவியல்ரீதியாக இது என்னுடைய மைனஸ் பாய்ண்ட் என்று சொல்லலாம். ஏனென்றால் என்னை நானே பாமுக்காக என் மனசுக்குள் உணரத் தொடங்கியதுபோலத் தோன்ற ஆரம்பித்துவிட்டது. எப்படி என்றால் தினமும் நான் வேலைக்கு பைக்கில் கிளம்பி நண்பரின் கடையில் நிறுத்திவிட்டு திருவண்ணாமலைக்கு பஸ் ஏறிப்போவதெல்லாம் குப்புசாமியாக அல்லாமல் பாமுக்காகவே பைக் ஓட்டி பாமுக்காகவே பஸ்ஸில் ஏறி பாமுக்காகவே வழியெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டே போவது மாதிரி.. கலசப்பாக்கத்தில் சாலையோரம் ஏதாவது விற்பனை செய்வார்கள். இதையெல்லாம் பாமுக் பார்த்து எழுதினால் எப்படி எழுதுவார்… இதே மாதிரி நான் பார்க்கும் ஒவ்வொரு பார்வையையும் பாமுக் பார்த்தால் எப்படி எழுதுவார்? பாமுக் பார்த்தால் எப்படி சொல்லுவார்? நம்மிடம் யாராவது பேசினால் பாமுக்காக இருந்தால் எப்படி பதில் சொல்லுவார்? இந்த மாதிரி பாமுக் பாமுக் என்று பாமுக் என் தலையில் மிகப்பெரிய ஒரு பிசாசாய், மலையேற முடியாத ஒரு பிசாசாய் இருந்தார். அது ஒரு விதத்தில் நல்லது. எந்த விதத்தில் என்றால்.. White castle மொழிபெயர்ப்பு பற்றி சொல்லவேண்டும். அது அவருடைய ஆரம்பகால ஆங்கில மொழிபெயர்ப்பு. அதை Victoria Holbrook மொழிபெயர்த்திருந்தார். My name is Red – ஐ Erdağ Göknar மொழிபெயர்த்திருந்தார். அதன் பிறகு The black book-ஐ முதலில் Güneli Gün என்கிற துருக்கிய மொழிபெயர்ப்பாளர்தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார். ஆனால் பாமுக்குக்கு அந்த மொழிபெயர்ப்பில் திருப்தி ஏற்படவில்லை. பிறகுதான் அவருக்கு Maureen Freely கிடைத்தார். Maureen Freely பாமுக்குக்கு மிகப் பிடித்தமான மொழிபெயர்ப்பாளர். பாமுக்குக்கு ஆங்கிலமும் தெரியும். அதனால் அந்த ஆங்கில மொழிபெயர்ப்பை அவரே ஒப்பிட்டுப் பார்ப்பார். Güneli Gün-ன் மொழிபெயர்ப்பு எவ்வளவுதான் நன்றாக இருந்தாலும் அந்த அளவுக்கு உண்மையானதாக இல்லை என்று அவருக்குத் தோன்றியிருக்கிறது. அதனால் Maureen Freely-யிடம் சொல்லி மறுபடியும் அதை மொழிபெயர்த்திருக்கிறார். இப்போது மார்க்கெட்டில் Maureen Freely மொழிபெயர்ப்புதான் கிடைக்கும். பெரும்பாலும் Güneli Gün மொழிபெயர்ப்பு கிடைக்காது.
Erdağ Göknar மொழிபெயர்ப்பில் My
name is Red-ஐ படித்துவிட்டு Maureen Freely மொழிபெயர்ப்பில் Other colours என்ற அவருடைய
கட்டுரைத் தொகுப்பு உள்ளிட்ட பாமுக்கின் மற்றப் படைப்புகளைப் படிக்கும்போது
வித்தியாசமே தெரியாது. பாமுக்கின் உண்மையான குரலை இருவரும் மிகச்சரியாக அவர்களுடைய
ஆங்கில மொழிபெயர்ப்புக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள் என்பது புரிகிறது. அதனால்
பாமுக்கின் நடை, அவர் எந்த மாதிரியான சொற்களைப் பிரயோகிப்பார் , தமிழில் இன்ன சொல்லைத்தான் பயன்படுத்துவார்
என்றெல்லாம் உங்கள் வயிற்றுக்குள் உணர முடியும். என்று சொன்னான் என்பாரா? என்று கூறினான்
என்பாரா? வலது புறம் என்று
எழுதுவாரா? வலப்புறம் என்று எழுதுவாரா? இவை எல்லாவற்றுக்கும் பாமுக் எப்படி எழுதுவார்
என்று யோசிக்கும்போது வலதுபுறமா? வலப்புறமா? சொன்னானா? கூறினானா? அல்லது உரைத்தானா? எந்த இடத்தில் குதிரை என்பார்? எந்த இடத்தில்
புரவி என்பார்? இந்த மாதிரி ஒவ்வொரு சொல்லும். அவருக்கு தமிழ் ஒருபோதும் தெரியாது. ஆனாலும்
லா.ச.ரா. சொல்வது மாதிரி ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னாலும் ஒவ்வொரு உணர்வு
இருக்கிறது. பாமுக்கின் அந்த ஆன்மாவுக்கு எந்த சொல் பொருத்தமாக இருக்கும் என்பது பாமுக்கை
முழுமையாக உள்வாங்கியிருப்பவனுக்குப் புரியும். விக்டோரியா ப்ரூக்ஸின் மொழிபெயர்ப்பில் அது கொஞ்சம் தடம்
மாறுகிறது. White castle படிக்கும்போது பாமுக் பல வரிகளை இப்படி
எழுதியிருக்க மாட்டாரே என்று எனக்குத் தோன்றுகிறது. இது மிகவும்
அதிகப்பிரசங்கித்தனமான கருத்துதான். ஏனென்றால் அது பாமுக்கின் ஒப்புதலோடுதான்
வந்திருக்கிறது. ஆனால் பாமுக்கின் மிக அணுக்கமான வாசகன் என்ற வகையில் அந்த
மொழிபெயர்ப்பைப் படிக்கும்போது விக்டோரியா ப்ரூக்ஸின் மொழிபெயர்ப்பு sounds more like an English Novel. பாமுக்கின் துருக்கியத்தன்மை, பாமுக்கின்
தனித்துவ நடை அதில் சரியாகப் பொருந்தவில்லை. அதனால் நான் தமிழில்
மொழிபெயர்க்கும்போது பாமுக் அதை மூலத்தில் எப்படி எழுதியிருந்திருப்பார் என்பதை
நானே உத்தேசித்து அந்த நடையை, தொனியை பாமுக்தனமாக மாற்றி தமிழில் மொழிபெயர்த்தேன்.
ஒரிஜினலைப்
படித்து நான் வெண்ணிறக்கோட்டை மொழிபெயர்ப்பை செய்யவில்லை. விக்டோரியா ப்ரூக்ஸ்
மொழிபெயர்த்த ஆங்கில மொழிபெயர்ப்பைப் பார்த்துதான் நான் செய்தேன். ஆனால் அந்தப்
புத்தகத்தில் இல்லாத எதையும் நான் மொழிபெயர்க்கவில்லை. ஒரு மொழிபெயர்ப்பாளர்
இல்லாத எதையும் எழுதவே கூடாது. எழுதிய எதையும் விட்டுவிடவும் கூடாது. இது இரண்டும்
நிச்சயம். ஆனால் அந்த தொனி (tone) இருக்கிறதல்லவா
அதை நீங்கள் கொஞ்சம் ஆல்டர் பண்ணலாம். மொழிபெயர்ப்பாளனுக்கு என்று இருக்கிற
சுதந்திரம் மிகக் குறுகிய வழி. அதற்குள் நீங்கள் செய்யலாம். எனவே விக்டோரியா
ப்ரூக்ஸின் ஆங்கில மொழிபெயர்ப்பு பாமுக்கை முழுமையாக பிரதிபலிக்கவில்லை என்று
எனக்குத் தோன்றியதால் பாமுக்கின் ஒரிஜினல் முகத்தைப் பிரதிபலிக்கும் நடையில் நான்
வெண்ணிறக்கோட்டையை நான் மொழிபெயர்த்தேன். மறுபடியும் சொல்கிறேன், எந்த ஒரு வார்த்தையையும் கூடுதலாகவோ, குறைச்சலாகவோ, சேர்த்தோ விடுபட்டோ நான் மொழிபெயர்க்கவில்லை. அப்படி மொழிபெயர்க்கும்
உரிமையும் கிடையாது. ஆனால் எல்லா விஷயத்தையும் சொல்லி அந்தத் தொனியை நீங்கள் மாற்றலாம்.
இந்த நான்கு
புத்தகங்களையும் தொடர்ந்து மொழிபெயர்த்து முடித்தவுடனேயே என்னை
ஆசுவாசப்படுத்திக்கொள்ள காலம் தேவைப்பட்டது. கண்ணன் ஒவ்வொரு முறையும் ஃப்ராங்க்பர்ட்
போய்விட்டு வரும்போது நிறைய புத்தகங்களை வாங்கிவருவார். இவற்றில் எந்தெந்த புத்தகங்களை எல்லாம் நாம்
மொழிபெயர்க்க உரிமை வாங்கலாம் என்று அவருடைய நண்பர்கள் எல்லோரிடமும் கொடுத்து
கேட்பார். அப்போது Dag
Solstad ன் Shyness and Dignity-ஐ கொடுத்திருந்தார். அது எனக்குப் படித்ததும்
மிகவும் பிடித்துவிட்டது. கண்ணனிடம் நீங்கள் இதற்கு உரிமை வாங்கலாம், இதை நானே பண்ணுகிறேன் என்றேன். “நீங்க பண்ணுறீங்களா? அடுத்ததாக Black
Book பண்ணனுமே?” என்றார். “இது ஒரு சின்ன புத்தகம்தான். இதை முடித்துவிட்டு Black Book வருகிறேன். அதற்கான கொஞ்ச கால நீட்டிப்புக்கான
அனுமதி வாங்கிக்கொள்ளுங்கள்.” என்றேன். என்ன
பண்ணுவது? ஒரு பதிப்பாளர் என்னை மாதிரியான
மொழிபெயர்ப்பாளரிடம் மாட்டிக்கொண்டு படுகிற கஷ்டமெல்லாம் என்னவென்று நீங்கள்
கண்ணனிடம்தான் கேட்கவேண்டும். கண்ணனுக்கு இப்போது ரத்த அழுத்தம் வந்திருக்கிறதா
என்று தெரியவில்லை. ரத்த அழுத்தம் வந்திருந்தாலோ, வயிற்றில் அல்சர் வந்திருந்தாலோ அதற்கு முக்கியமான காரணம் என்னை மாதிரியான
ஆட்களாகத்தான் இருப்பார்கள். அவருக்கு வேறு வழியில்லை. சரி என்று சொல்லிவிட்டார். Dag Solstad நாவலைப்
படிக்கும்போது நான் ஜாலியாகப் படித்துமுடித்துவிட்டேன். ஆனால் மொழிபெயர்க்க
உட்காரும்போதுதான் பெண்டு நிமிர்த்திவிட்டது. அது மிக மிக மிக மிக intense-ஆன ஒரு நாவல். அதை மொழிபெயர்க்க 650
நாட்களுக்கு மேல் ஆயிற்று. அது மிகச்சிறிய புத்தகம். கண்ணன்
வெறுத்துப்போய்விட்டார். பாவம். மிக உள்முகமான ஒரு நாவல் அது. உடைந்த குடை நீங்கள்
படித்தாலே தெரியும். அவ்வளவு எளிதாய் அதை மொழிமாற்றம் செய்யவே முடியாது. உடைந்த
குடை முடித்துவிட்டு Black
Book பண்ணலாம் என்றிருந்த
நேரத்தில், அப்போது உடைந்த குடை முடிக்கவில்லை, அந்த நேரத்தில் அருந்ததி ராய் அவருடைய அடுத்த
நாவலோடு வந்துவிட்டார். அருந்ததி ராய்க்கு முன்னால் பாமுக், முரகாமி, ஜூலியன் பார்ன்ஸ் யாருமே எனக்குப் பொருட்டில்லை. அருந்ததி ராய் என்னை எஸ்தா
என்று அழைப்பார். நான் அவரை ராகேல் என்பேன். அருந்ததி ராகேல், குப்புசாமி எஸ்தப்பன். எஸ்தப்பனுக்கு
ராகேல்தான் முக்கியம். நாங்கள் ஒரு கருவில் உருவான இரட்டை சகோதர சகோதரிகள். அதனால்
என்னுடைய சகோதரி புத்தகம்தான் எனக்கு முக்கியம் என்று கண்ணனிடம் நான் அருந்த்தி
ராயின் புத்தகத்தை மொழிபெயர்க்கப்போறேன் என்றேன். அப்படியென்றால் Black Book யார் பண்ணுவாங்க என்றார். வேறு யாரிடமாவது
கொடுத்து பண்ணிக்கொள்ளுங்கள் என்றேன். அகிலன் மிக அற்புதமான மனிதர். உண்மையில்
என்னை மிகவும் கூச்சத்தில் நெளிய வைத்துவிட்டார். அவர் ஒரு ஆங்கிலப் பேராசிரியர்.
ஒரு கல்லூரியின் பிரின்சிபலாக இருந்து ஓய்வு பெற்றவர். எவ்வளவு சீனியர். அவர்
எனக்கு ஃபோன் செய்து,
பாமுக் என்றாலே நீங்கள்தான்.
நான் செய்யலாமா என்று கேட்டார். எனக்கு சிரிப்பாக இருந்தது. பாமுக்குக்கு நான்
என்ன பாத்தியமா? அப்படியெல்லாம் இல்லை. பாமுக்குக்கு எவ்வளவோ
மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கிறார்கள். என்னிடம் அனுமதி கேட்கவேண்டும் என்ற
அவசியமெல்லாம் இல்லை. அதற்கான எந்த ஒரு தேவையும் இல்லை. ஆனால் அதுதான் அவரது
பணிவடக்கம். அவ்வளவு பெரிய மனிதர் அவர். பாமுக்கை எப்படி அணுகவேண்டும்
என்பதையெல்லாம் அவர் என்னிடம் கேட்டுக்கொண்டார். அதற்கும் அவசியமே இல்லை. 35
வருடங்களாக ஆங்கில இலக்கியம் மாணவர்களுக்குப் பாடம் எடுத்தவர். என்னை மாதிரியான பையனிடம்
பாமுக்கை மொழிபெயர்க்கும்போது என்னென்ன மாதிரியான சிக்கல்கள் வரும் என்றெல்லாம்
கேட்கிறார் என்றால், நான் யோசிக்கிறேன், நான் இதுபோல் யாரிடமாவது போய்க் கேட்பேனா என்று. மானசீகமாக என் தலையில் இரண்டு
அல்ல, ஏழெட்டு கொம்புகள் வளர்ந்திருப்பது போல
எனக்குத் தோன்றும். அந்த மாதிரியான திமிர்த்தனத்தோடு இருக்கும் எனக்கு இவரைப்
பார்க்கும்போது வெட்கமாக இருந்தது. எவ்வளவு பெரிய மனிதர் இப்படி இருக்கிறாரே
என்று. இன்னும் அவருடையதைப் படிக்கவில்லை. ஆனால் அவர் மொழிபெயர்த்து முடிக்கும்
தருவாயில் சொன்னார்,
“நான் பாமுக்கை எப்படி
மொழிபெயர்த்திருக்கிறேன் என்றால்… உங்களைப் போல அப்படியே ஒவ்வொரு
வார்த்தைக்கும்.. அப்படியெல்லாம் பண்ணவில்லை, பையன்களுக்கு நான் எப்படி பாடம் நடத்துவேன்? கஷ்டமான ஒரு விஷயத்தை பையன்களுக்கு புரிகிற மாதிரி விளக்குவேன் இல்லையா? என்னுடைய மொழிபெயர்ப்பையும் பையன்களுக்கு பாடம்
நடத்துவதைப் போலவே பார்க்கிறேன்.” என்றார்.
அப்படிப் பண்ணக்கூடாது என்றெல்லாம் கிடையவே கிடையாது. ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு
இதுதான் இறுதி வடிவம் என்று ஒன்றுமே கிடையாது. ஒரு படைப்புக்கு பல
மொழிபெயர்ப்புகள் வரலாம். இப்போது பாருங்கள், தஸ்தாயெவ்ஸ்கிக்கு எத்தனை? Constance Garnett- இலிருந்து
ஆரம்பித்து எவ்வளவோ மொழிபெயர்ப்புகள் வந்துவிட்டன. நான் எல்லோரிடம் சொல்லிக்கொண்டே
இருப்பேன், Richard
Pevear மொழிபெயர்ப்புதான்
இருப்பதிலேயே மிகவும் நெருக்கமான மொழிபெயர்ப்பு. அப்படிதான் எல்லோருமே
சொல்கிறார்கள். நபக்கோவ் கூட அந்தக்காலத்திலேயே சொல்லியிருக்கிறார். Garnett- மொழிபெயர்ப்பை கிழிகிழி என்று
கிழித்திருக்கிறார் மனிதர். அவரைக் கிழவி என்றுதான் குறிப்பிடுவார். கார்னெட்
இல்லையென்றால் ரஷ்யன் மாஸ்டர் பீஸஸ் எல்லாம் வெளியுலகுக்குத் தெரிந்திருக்கவே
தெரிந்திருக்காது. ஆனால் அந்தக் கிழவி மொழிபெயர்க்கவே இல்லை, மறுகூறல்தான் செய்திருக்கிறது. தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, புஷ்கின், செக்காவ் எல்லா கதைகளையும் இந்தக்கிழவி
தன்னுடைய குரலிலேயே சொல்கிறது, எல்லாமே
மறுகூறல்தான். அந்தக் கதைகளைப் படிக்கும்போது தஸ்தாயேவ்ஸ்கியுடைய குரலே கேட்கவில்லை என்றெல்லாம்
அவர் சொல்லியிருக்கிறார். அது வேறு விஷயம். ஆனால் Pevear and Volokhonsky மிக நுட்பமாக அந்தப் பிரதியை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்திருந்தார்கள். நீங்கள் Pevear and Volokhonsky மொழிபெயர்ப்பில்
தஸ்தயேவ்ஸ்கியைப் படிக்கும்போது
நிச்சயமாக அது வேறு மாதிரியான அனுபவமாகத்தான் உள்ளது. நீங்கள் ஏற்கனவே வேறு
மொழிபெயர்ப்புகளில் அவருடைய இடியட்டையும் கரமசோவையும் படித்துவிட்டு பிறகு Pevear and Volokhonsky மொழிபெயர்ப்பைப் படிக்கும்போது, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் Crime and Punishment- Oliver Ready ன் புது
மொழிபெயர்ப்பில் வந்திருக்கிறது. ஆலிவர் ரீடியின் மொழிபெயர்ப்பு Pevear and Volokhonsky-இன்
மொழிபெயர்ப்பை விடவும் மிகுந்த உயிரோட்டத்துடன் இருக்கிறது என்று ஒரு கருத்து
உள்ளது. எனக்குத் தெரியவில்லை. நான் அதைப் படித்தால்தான் தெரியும். அதனால் ஒரு
படைப்புக்கு நிறைய மொழிபெயர்ப்புகள் இருக்கலாம். காலந்தோறும் புதிய
மொழிபெயர்ப்புகளுக்கான அவசியம் ஏற்பட்டுவிடுகிறது.
அகிலன் சார்
அப்படிப் பண்ணுகிறார் என்றால் அவரைப் பொறுத்தவரை அதுதான் சரியான மொழிபெயர்ப்பு.
தேவதாஸ் அவருடைய மொழிபெயர்ப்புகளை அவருடைய பாணியில் பண்ணுகிறார் என்றால் அவரைப்
பொறுத்தவரை அதுதான் சரி. எனக்கு என்னுடையது. அது அப்படிதான். நான் நம்புகிற சில
விஷயங்கள் எனக்கு உண்டு. என்னுடைய நம்பிக்கையின் அடிப்படையில் சில விஷயங்களை
செய்கிறேன். இது நம்பிக்கை சார்ந்த ஒரு விஷயம்தான். என்னைப் பொறுத்தவரை என்னுடைய
நம்பிக்கை என்னவென்றால் தமிழில் மொழிபெயர்ப்பது என்பது தமிழாக்குவது (Tamilize) கிடையாது. யாராவது என்னுடைய மொழிபெயர்ப்பை
படித்துவிட்டு “உங்களுடைய மொழிபெயர்ப்பு ரொம்ப நல்லா இருக்கு.
தமிழிலேயே எழுதப்பட்டது போல இருக்கு. பாத்திரங்களுடைய பெயர்களை எல்லாம் தமிழ்ப்பெயர்களாக
மாற்றிவிட்டால் ஒரு தமிழ்ப்படைப்பை படிப்பது போலவே இருக்கு , ” என்று சொன்னால் நான் சரியாக மொழிபெயர்க்கவில்லை என்றுதான்
தோன்றும். எப்படி என்றால் ஒரு துருக்கிய நாவலுடைய பாத்திரங்களின் பெயர்களை தமிழில்
மாற்றிவிட்டால் அது தமிழ் நாவல் மாதிரியே இருக்கிறது என்று எப்படி சொல்ல முடியும்? முடியவே முடியாது.
ஒவ்வொரு
எழுத்தாளருக்கும் ஒரு குரல் இருக்கிறது. மிமிக்ரி பண்ணுவது போலத்தான். மிக
எளிமையான உதாரணம் ஒன்று சொல்கிறேன். எம் ஆர் ராதாவுக்கென்று ஒரு குரல், உச்சரிப்பு எல்லாம் இருக்கிறது. எம் ஆர் ராதா
தமிழில்தான் பேசுவார். ஆனால் கல்லூரிப் பையன்கள் செய்வார்களே அது போல எம் ஆர்
ராதாவை நீங்கள் வேறு மொழியில் மிமிக்ரி பண்ணும்போது, ஆங்கிலத்தில் பேசும்போது எப்படி இருக்கும்? தமிழில் பேசுவது மாதிரிதானே ஆங்கிலத்திலும் பேசுவார்? அதை நீங்கள் சிவாஜித்தனமாக ஆங்கிலத்தில் செய்தால் நன்றாக இருக்குமா? மொழிபெயர்ப்பு என்பதும் மிமிக்ரி மாதிரிதான்.
அதனாலேயே நான் மிகுந்த சிரமப்பட்டுதான் மொழிபெயர்ப்பு செய்வேன்.
கேள்வி – மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுக்கும்போது அதற்கு
ஏதாவது அந்தரங்கமான வரையறை இருக்கிறதா? அதைப் பற்றி
சொல்லுங்களேன்.
பதில் – கண்டிப்பாக உண்டு. முதலில் எனக்குப்
பிடிக்கவேண்டும். எனக்கு எது பிடிக்கும் என்பதற்கு வரையறையே கிடையாது. எனக்குப்
பிடிப்பதற்கு எவ்வளவோ காரணங்கள் இருக்கும். I should love it. ஏனென்றால் அந்தப் புத்தகத்துடனேயே ஒரு
வருடத்துக்குமேல் வாழப்போகிறேன். அதனால் எனக்கு வேண்டா வெறுப்பாக ஒரு விஷயத்தைப்
பண்ண முடியாது. இரண்டாவது அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிற விஷயத்தோடு
நான் உடன்பட்டிருக்க வேண்டும். உடன்பாடு இல்லாத ஒரு விஷயத்தை என்னால்
செய்யமுடியாது. அருந்ததி ராயுடைய The Ministry of Utmost Happiness முழுக்க முழுக்க ஒரு அரசியல் நாவல் . அருந்த்தி
ராயுடைய அரசியலுக்கு நான் எதிராக இருந்தால் அந்தப் பணியை என்னால் தொடவே முடியாது.
இது ஒரு அடிப்படையான விஷயம். இன்னொன்று தமிழுக்கு அந்த நாவல் வந்தாகவேண்டிய
கட்டாயம் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த காலகட்டத்துக்கு இந்த நாவல் தமிழில் வந்தாகவேண்டும் என்று நான் நினைப்பதுதான்
முக்கிய காரணம். இப்போது உடைந்த
குடை இருக்கிறதல்லவா,
அதை நனவோடை என்று
சொல்லமுடியாது, முழுக்க முழுக்க உள்முகமான ஒரு நாவல். அந்த
மாதிரியான நாவல்கள் தமிழில் படிக்கக் கிடைக்கவேண்டும் என்பதற்காகப் பண்ணினேன். Modern life ஒரு தனிமனிதனுடைய வாழ்க்கையில் எப்படிப்பட்ட
சிக்கல்களை உறவுமுறைகளை உண்டாக்குகிறது என்பது எல்லோர்க்கும் பொதுவான ஒரு விஷயம்.
அந்நிய நிலத்தில் நடந்தாலும் modern life கொடுக்கும்
மனச்சிக்கல், உடைந்த குடையில் மிக முக்கியமானதாகப் பட்டது.
இந்த மாதிரியான காரணங்கள்தான் நான் மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுக்கும் விஷயங்கள்.
இன்னொன்றும் இருக்கிறது. தமிழில் மொழிபெயர்ப்பதற்கு மிகச்சிக்கலாக இருக்கும்
என்னும் ஸ்கிரிப்டையும் நான் சவாலாக எடுத்துக்கொள்வேன். Raymond Carver எனக்கு மிகப்
பிடித்தமான எழுத்தாளர். அவருடைய எல்லா சிறுகதைகளையும் படித்திருக்கிறேன். அவர்
இருந்ததே பாவம் ஐம்பது வருஷம்தான். அவருடைய மொத்த சிறுகதைகளையும் ஒரு தொகுப்பில்
அடக்கிவிடமுடியும். அதனால் அவருடைய எல்லா சிறுகதைகளையும் படித்திருக்கிறேன் என்பது
ஒன்றும் சாதனை கிடையாது. ஆனால் எல்லா கதைகளையும் என்னால் மொழிபெயர்க்க முடியுமா? பாமுக்கை விடவும் எனக்கு மிகப் பிடித்த
எழுத்தாளர், முரகாமியை விடவும் மிக நெருக்கமான எழுத்தாளர் Raymond Carver. ஆனால் அவருடைய எல்லா கதைகளையும் என்னால்
மொழிபெயர்க்கமுடியுமா என்று கேட்டால் பயம்தான் எனக்கு. இப்போது பிப்ரவரி மாத
காலச்சுவடு இதழில் வந்திருக்கிறதே இறகுகள், இந்த சிறுகதையை பத்துவருடமாக untranslatable என்ற வரிசையில்
நான் வைத்திருந்தேன். ஒரு sensible translator-க்கு untranslatable என்று சில விஷயங்கள் இருக்கின்றன என்பது புரிய
வேண்டும். எல்லாவற்றையும் மொழிபெயர்த்திட முடியாது. உதாரணத்துக்கு
ஜே.டி.சாலிங்கரின் Catcher
in the Rye. என்னிடம் பத்து கோடி ரூபாய் கொடுத்து யாராவது
பண்ணச்சொன்னாலும் பண்ண மாட்டேன். அது தமிழில் வந்திருக்கிறது. அது வேறு விஷயம்.
அதை மொழிபெயர்த்தவருக்கு பண்ண முடியும் என்று தோன்றியிருக்கிறது.
பண்ணியிருக்கிறார். அதில் நான் போகவிரும்பவில்லை. என்னால் சாலிங்கருடைய Franny and Zooey-ஐக் கூட மொழிபெயர்க்க முடியாது. அவர் ஒரு
மொழிபெயர்க்க முடியாத எழுத்தாளர் என்று எனக்குத் தோன்றுகிறது. நான் சொன்னேன்
இல்லையா, நான் நம்புகிற சில விஷயங்கள் என்று. அந்த
மாதிரிதான். Tobias
Wolff எனக்கு மிகப் பிடித்த
எழுத்தாளர். அவருடைய எழுத்தை மொழிபெயர்ப்பது என்பது என்னால் முடியாத ஒரு விஷயம்
என்பேன்.
கேள்வி – அப்படியென்றால் மொழிபெயர்க்க முடியாத ஒன்று
என்றும் ஒரு விஷயம் இருக்கிறது அல்லவா?
பதில் – நிச்சயம் இருக்கிறது. அதை நான் இன்னும் கொஞ்சம்
விளக்கமாக சொல்லவேண்டும். ஏன் மொழிபெயர்க்க முடியாது என்றால் அந்த மூலத்துக்கு
நியாயம் கற்பிக்க முடியாது. இந்த இடத்தில் தமிழையும் நீங்கள் கணக்கில்
எடுத்துக்கொள்ளவேண்டும். Tobias Wolff-ன் Hunters in the snow என்ற சிறுகதை. மிகவும் திட்பம் வாய்ந்த
சிறுகதை. அதில் அமெரிக்காவில் இருக்கிற வேட்டைகாரர்கள் வேட்டைக்குப் போவார்கள்.
அவர்களுக்குள் கொச்சையாக கன்னாபின்னாவென்று திட்டிக்கொண்டும் பேசிக்கொண்டும் போகிற, அவர்களுக்குள் இருக்கிற love and hate பற்றிய கதை. அந்தக் கதையை ஏன்
மொழிபெயர்க்கமுடியாது என்றால் அவர்கள் பேசுவது முழுக்க முழுக்க வசைச் சொற்கள்.
அமெரிக்க வசைச் சொற்கள். அமெரிக்க வசைச் சொற்களிலேயே இனவெறியும் இருக்கிறது.
பேச்சுமொழியில் கருப்பர்களுடைய வசைச்சொற்கள் ஒரு மாதிரியாகவும்
வெள்ளைக்காரர்களுடைய வசைச்சொற்கள் வேறு மாதிரியாகவும் இருக்கும். அமெரிக்கா என்பது
மிகப்பெரிய நிலப்பரப்பு. ஒவ்வொரு நிலப்பரப்புக்கும் உரித்தான வட்டார வழக்குகள். தமிழ்
மாதிரிதான். திருநெல்வேலி வசை, தஞ்சாவூர் வசை, வட ஆற்காடு வசை என்று இருக்கின்றன அல்லவா? அதைப் போலவேதான். இத்தனை விஷயங்கள்
இருக்கின்றன. இதை நீங்கள் துல்லியமாகத் தமிழில் எப்படிக் கொண்டுவர முடியும்? தமிழில் அந்தக் கெட்டவார்த்தைகளை மொழிபெயர்க்க
முடியாது. Hunters in
the Snow கதையை இதுதான்
கதை என்று வாய்வழி நான் உங்களுக்கு சொல்லலாம். ஆனால் மொழிபெயர்க்க உட்கார்ந்தால்
இந்த மாதிரி untranslatable
வரிகளை ஏதோவொன்றைப்
போட்டு இதைத்தான் அந்த வரி சொல்லவருகிறது என்று ஒப்பேற்றி அந்த மொழிபெயர்ப்பை
செய்வதற்கு என்னால் முடியாது. அதனால் எல்லாருக்கும் அது untranslatable என்று சொல்லவில்லை. நான் நம்புகிற, என்னுடைய மொழிபெயர்ப்புக் கோட்பாடுகளுக்கு untranslatable நிறைய உள்ளன. ஆனால் காலச்சுவட்டில்
வந்திருக்கின்ற ரேமண்ட் கார்வருடைய இறகுகள் கதை மிக நுட்பமான விஷயத்தைச் சொல்லும்
கதை. அவ்வளவு நுட்பத்தை மொழிபெயர்ப்பில் கொண்டுவர முடியுமா என்று என் மீதே எனக்கு
நம்பிக்கையின்மையும் சந்தேகமும் இருந்தது. கோணங்கி அண்ணனிடம் பேசும்போது, எப்போதுமே என் வாயைக் கிளறி “நல்ல கதைகளையெல்லாம் சொல்லுடா” என்பார். அவரிடம் இந்தக் கதையைப் பற்றிப்
பேசிக்கொண்டிருந்தபோது மிகுந்த உற்சாகத்துடன் “பண்ணுடா அந்தக் கதையை” என்றார். “இல்லண்ணா, அந்தக் கதை ரொம்ப நுட்பமான கதை, அதை
மொழிபெயர்க்கிறது கஷ்டம்” என்றேன். “அதெல்லாம் இல்லை, நீ மொழிபெயர்த்து கல்குதிரைக்கு அனுப்பு” என்றார். அவரை நான் ஏமாற்றிவிட்டு காலச்சுவட்டுக்கு அனுப்பிவிட்டேன். ஏன்
என்றால் அவர் கொடுத்த கால அவகாசத்துக்குள் என்னால் அதைச் செய்யமுடியவில்லை. அடுத்த
முறை கோணங்கியைப் பார்க்கும்போது அவர் என்னைத் திட்டுவார், முதுகில் குத்துவார், அடிவாங்கிக்
கொள்வேன். ஆனால் பண்ணிமுடித்துவிட்டேன். அது காலச்சுவட்டில் வந்துவிட்டது.
ஏறக்குறைய பத்து வருஷமாக எனக்கு நம்பிக்கையில்லாமல் இருந்தது. ஆனால் கோணங்கியிடம்
பேசிக்கொண்டிருக்கும்போது அந்தக் கதையை மொழிபெயர்த்தே ஆகவேண்டும் என்ற நம்பிக்கை
வந்துவிட்டது. ஒவ்வொரு
மொழிபெயர்ப்பாளருக்கும் untranslatable கதைகள் என்பவை
ஒவ்வொரு மாதிரியாக இருக்கும்.
கேள்வி - இப்போது நிறைய மொழிபெயர்ப்புகள் வருகின்றன.
உலகமயமாக்கல் காரணமாக நிறைய புத்தகங்களும் கிடைக்கின்றன. நவீன உலகத்தில்
புத்தகங்கள் எளிதாக வாசிக்கத்தக்க வகையில் பிடிஎஃப், கிண்டில் மூலமாகவும் கிடைக்கின்றன. ஒரு மொழிபெயர்ப்பாளர் ஒரு மொழிபெயர்ப்பைப்
பண்ணும்போது இந்த சூழலுக்கு இந்த மொழிபெயர்ப்பு வருவது சரியாக இருக்குமா என்ற
புரிதல் இங்கு உள்ளதா?
காம்யு அந்நியன், ராக், லத்தீன்
அமெரிக்கன் என நிறைய வந்திருக்கின்றன. இவையெல்லாம் கடந்த பத்து வருஷங்களாக ஒரு
பெரிய மாற்றம் உண்டாக்கியிருக்கின்றன. அந்த மாதிரி உண்மையிலேயே மொழிபெயர்ப்பு
இங்கு பெரிய அளவில் மாற்றத்தை உண்டாக்கியிருக்கிறதா?
பதில்: - கண்டிப்பாக.
அதில் சந்தேகமே இல்லை. அந்நியன் என்று சொன்னீர்கள் இல்லையா? அந்நியன் எல்லாம் உலகமயமாக்கல் என்ற பதம்
உருவாவதற்கு முன்பே தமிழுக்கு வந்துவிட்ட ஒரு நாவல் அது. அந்நியன் தமிழ்
இலக்கியச்சூழலில் ஏற்படுத்திய பாதிப்பு மிக முக்கியமானது. இது பற்றி விரிவாகவே
நான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். மொழிபெயர்ப்புகள் எல்லாக் காலக்கட்டத்திலும்
அந்தக்காலத்தின் முக்கியமான ஒரு பார்வையை முன்வைத்திருக்கின்றன. அவை
எழுத்தாளர்களையும் பாதித்திருக்கின்றன. புதுப்புது விஷயங்களை, இதுவரை எழுதியிராத விஷயங்களை
எழுதவைத்திருக்கின்றன. மொழிபெயர்ப்புகள் தமிழின் நேரடி படைப்புகளில் உண்டாக்கிய
தாக்கம் மிகப் பெரிது. சாகித்ய அகாடமிக் கூட்டம் ஒன்றில் என்னுடைய கட்டுரையின்
தலைப்பும் இதுதான், ‘ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மொழிபெயர்ப்புகள்
தமிழ்ப் படைப்புகளில் ஏற்படுத்திய தாக்கம்’ அது ஒரு நீண்ட கட்டுரை. அது மிகவும் விரிவாகப் பேசவேண்டிய விஷயம்.
கேள்வி – அப்படியென்றால்… மொழிபெயர்ப்புக்கான தேவை இருக்கிறது?
பதில் – மொழிபெயர்ப்புக்கான தேவை எப்போதுமே இருக்கிறது.
ஏனென்றால் உலகத்தில் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியான விஷயங்கள்
நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அந்தந்த விஷயங்களின் பிரதிபலிப்பாகத்தான் அந்தந்த
படைப்புகளும் வந்துகொண்டிருக்கின்றன. அதுவும் இந்த மாதிரியான நெருக்கடியான
காலக்கட்டத்தில், ஏற்கனவே வெளிவந்த பல விஷயங்கள் மறுபடியும்
ஞாபகத்துக்கு வருகின்றன. அடுத்து நான் மொழிபெயர்க்க Brave new world-ஐத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணமே இன்றைய
காலச்சூழல்.
George Orwell ன் Nineteen Eighty-Four -ஐ கா.நா.சு. மொழிபெயர்த்தது ஏறக்குறைய ஐம்பது அறுபது வருடத்துக்கு முன்பு. அந்த நாவல் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் வந்த நாவல். அவருடைய Animal Farm- 1984- இரண்டையும் அறுபதுகளில் கா.நா.சு. மொழிபெயர்த்திருக்கிறார். அதை அவர் மொழிபெயர்க்கும்போது ஆர்வல் சொல்கின்ற விஷயம், அந்த கம்யூனிசம், நாசிசம் வீழ்ந்த கதை எல்லாம் முடிந்துவிட்ட காலக்கட்டத்தினுடைய விஷயங்கள். ஆனால் அதே Nineteen Eighty-Four இன்றைய காலக்கட்டத்துக்கு இப்போதுள்ள Neo-Nazism-க்கு மிகப் பொருத்தப்பாட்டுடன் இருக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் அதன் முக்கியத்துவம் வேறு மாதிரி இருக்கிறது. 1984 ஒரு விஷயத்தை சொல்கிறது. அதன் பிறகு அது சொல்லாத ஒரு பெரிய ஏரியா ஒன்று இருக்கிறது. 1984-ஐ அவர் எழுதியதே அதற்கு முன்னால் Huxley எழுதிய Brave new world-ன் பாதிப்புதான். Brave new world முழுக்க முழுக்க வேறு மாதிரியான dystopian நாவல். இன்றைய காலக்கட்டத்துக்கு அந்த நாவல் வெளிவந்தாகவேண்டிய கட்டாயம் உள்ளது. கிளாசிக் நாவல்களும் இந்தக் காலக்கட்டத்துக்கு புது அர்த்தத்தைக் கொடுப்பதாக உள்ளன. லத்தீன் அமெரிக்காவிலோ அல்லது மத்திய ஆசியாவிலோ ஜப்பானிலோ அங்கிருக்கும் அரசியல் சூழலின் பிரதிபலிப்பாக வெளிவரும் நாவல் நமக்கும் ஏதொவொரு ஒருவிதத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகத்தான் இருக்கிறது.
கேள்வி – சமகால அரசியலில் புனைவுகளைப் பேசத்தேவையில்லை என்பதுபோல் ஒரு குரல் தமிழ் இலக்கியச்சூழலில் ஒலிக்கிறது. மொழிபெயர்ப்புக்கும் அதுபோலொன்று இருக்கிறதா?
பதில் – சிலர் அரசியலிலிருந்து ஒதுங்கி தூய்மையான இலக்கியவாதிகளாக இருப்பார்கள். இது எல்லாக் காலத்திலும் இருக்கிறது. இந்தியா முழுக்க சுதந்திர வேட்கை கொழுந்துவிட்டு எரிந்த காலத்திலே கூட அவர்கள் பாட்டுக்கு அவர்களுடைய அரசியல் நீக்கம் செய்யப்பட்ட பிரதிகளைத்தான் படைத்தார்கள். அது எல்லாக்காலத்திலும் இருந்திருக்கிறது. அது காலத்தின் குரல் இல்லை. படைப்பாளிகளின் தேர்வு. அது அப்போதும் இருந்தது. இப்போதும் இருக்கிறது. எப்போதும் இருக்கும். புதுமைப்பித்தன் ஏன் அதை எழுதவில்லை? புதுமைப்பித்தன் ஏன் இதைப்பற்றி எழுதவில்லை? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். மௌனி ஏன் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி எழுதவில்லை என்றெல்லாம் நீங்கள் கேட்கமுடியுமா? ஒரு படைப்பாளி எதை எழுதவேண்டும் என்பதை அவன்தான் தீர்மானிக்கவேண்டும். சின்னப்ப பாரதி அதற்குப் பிறகு வந்த காலத்தில் எழுதிய தாகம் இருக்கிறது. பிறகு இடதுசாரி எழுத்தாளர்களுடைய வரிசை இருக்கிறது. அதே மாதிரி சமகால அரசியலை எழுதலாமா எழுதக்கூடாதா என்பதற்கு தீர்மானமான பதில் கிடையாது. ஒவ்வொரு படைப்பாளியும் முடிவு செய்யவேண்டிய விஷயம். எந்தக் கேள்விக்கும் எப்போதுமே ஒரே பதில் கிடையாது. அரசியலே இல்லாத Apolitical நாவலை மொழிபெயர்க்கலாமா என்ற கேள்வியே அபத்தம். அது ஒரு இலக்கியப் படைப்பாக இருந்தால் நீங்கள் பண்ணலாம். இன்னொன்று, அரசியல் இல்லாதது என்று எதுவுமே கிடையாது. டி.எம்.கிருஷ்ணாவுடைய புதிய புத்தகம் Sebastian and sons வந்துள்ளது. முழுக்க முழுக்க மிருதங்கம் செய்பவர்களைப் பற்றிய புத்தகம்தான் அது. டி.எம்.கிருஷ்ணா உங்களுக்கே தெரியும், அவர் மிகப்பெரிய இசைக் கலைஞர். அவர் ஒரு இசைக்கலைஞராக இருந்தாலும் அது ஒரு அரசியல் புத்தகம்தான். நீங்கள் அதை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்ததுதான் அது. அரசியல் இல்லாதது எது? அதில் ஜாதி அரசியல் இருக்கிறது. மிருதங்கம் செய்பவர்களைப் பற்றி நிறைய பேர் எழுதியிருக்கிறார்கள். இதற்கு முன்பு நிறைய கட்டுரைகள் வந்திருக்கின்றன. வீணை செய்பவர்களைப் பற்றிய கதைகள் வந்துள்ளன. நாதசுரம் செய்பவர்களைப் பற்றிய புத்தகங்கள் வந்துள்ளன. ராமகிருஷ்ணனின் சாகித்ய அகாடமி விருது பெற்ற சஞ்சாரம் நாவலும் இசைக்கருவிகள் செய்பவர்களுடைய கதையாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த புத்தகத்தில் ஜாதி அரசியலும் சேர்ந்திருக்கிறது. அந்தத் தோல்… அதைப் பற்றி நீங்கள் பேசினாலே கலரே மாறிவிடுகிறது பாருங்க. அது வெறும் மிருதங்கம் என்ற தாள இசைக்கருவியை எப்படி செய்கிறார்கள் என்னும் கதை அல்ல. யார் அதை செய்கிறார்கள், எங்கிருந்து வருகிறது, அந்த தோல் என்பது என்ன? பசுவை தெய்வமாகப் போற்றுகிற இந்தக் காலக்கட்டத்தில்… இறந்துபோன பசுவை யாராவது வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்றால் பசுவைக் கொன்றவன் என்று அவனை அடித்துக் கொல்கிறார்கள், மாட்டுக்கறி சாப்பிட்டதாக நினைத்து ஒரு குடும்பத்தையே அடித்துக் கொலை செய்கிறார்கள். இந்த மாதிரி பசு என்கிற விஷயத்தைப் புனிதமாக்கி, அதை வைத்து பெரிதாக ஒரு அரசியல், இந்துமத எழுச்சியை உண்டாக்குவதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கிற இந்தக் காலக்கட்டத்தில் மிகவும் ஆச்சாரமானப் பின்னணியில் இருப்பவர்கள் விரும்பிக் கேட்கிற அவ்வளவு புனிதமாக நினைக்கிற கர்நாடக சங்கீதத்திலேயே மாட்டுத்தோலில்தான் தாளம் உண்டாகிறது என்று அவர் சொல்கிறார். இது அரசியல் இல்லாமல் வேறு என்ன? அதிலும் டி.எம்.கிருஷ்ணா தெளிவாகச் சொல்கிறார், “செத்துப்போன மாட்டிலிருந்துதான் அந்த மிருதங்கத்துக்கான தோல் எடுக்கிறார்கள் என்று சில பேர் சமாதானம் சொல்லிக்கொள்கிறார்கள். அப்படியெல்லாம் கிடையவே கிடையாது. மிருதங்கம் செய்பவர்களைக் கேட்டுப்பாருங்கள், செத்துப்போன மாட்டினுடைய தோலில் அதன் ரத்தமெல்லாம் உறைந்துபோய் அதைப் பயன்படுத்தவே முடியாது. ஃப்ரெஷ் தோலில்தான் மிருதங்கமே செய்யமுடியும்” என்கிறார். இதைக் கேட்கிற மடியான கர்நாடக இசை ரசிகர்கள் எல்லாம் நெளிவார்கள். இது என்னவெனில் யாரையும் disturb பண்ணுற விஷயமே கிடையாது. உண்மை இப்படித்தான் இருகிறது, ஒவ்வொன்றையும் அது எப்படி இருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான். மிகவும் தூய்மையானது என்று நீங்கள் நம்புவது எதுவுமே கிடையாது. தூய்மை எது என்று நீங்கள் வரையறை எதுவும் செய்யமுடியாது .இதுதான் அடிப்படையான விஷயம். மிகவும் புனிதமானது என்று எதை நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ, அது உண்மையாகவே உங்களது கற்பனை. அந்த மாதிரி இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்பி உங்களை நீங்களே ட்யூன் பண்ணிப் பார்க்கிறீர்கள். ஆனால் நிதர்சனம் என்பது எல்லாவற்றையும் உள்ளடக்கியதுதான். எனவே இது ஏதோ மனத்தில் நஞ்சைக் கலக்குகிற விஷயமெல்லாம் கிடையாது. பார்வை விரிவாகவேண்டும் என்பதுதான். எதையுமே நீங்கள் குதிரைக்கு பட்டா போட்டமாதிரி பார்க்கக்கூடாது என்பதுதான் நோக்கமே தவிர, இதை ஒரு முரணாகப் பார்த்து ஒரு அரசியலுக்காக, ஒரு சர்ச்சைக்காக பண்ணுவதெல்லாம் கிடையாது. டி.எம்.கிருஷ்ணா ஏற்கனவே மிகவும் பிரபலம். அவருக்கு இந்த சர்ச்சையெல்லாம் தேவையே கிடையாது. மொழிபெயர்ப்புக்கும் அதுதான். எல்லா எழுத்துக்கும் அதுதான்.
கேள்வி – புனைவை மொழிபெயர்ப்பதற்கும் அபுனைவை மொழிபெயர்ப்பதற்கும் அடிப்படையில் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?
பதில் – நிறையே இருக்கிறது. நான் ஆங்கில இலக்கியத்தை கல்லூரிப் பாடத்தில் படித்துவந்தவன் கிடையாது. ரசனை விமர்சனம் மாதிரி நான் ஒரு ரசனை எழுத்தாளர்தான். அபுனைவு என்னும் Non-fiction-ஐ நீங்கள் மொழிபெயர்ப்பது என்பது இலக்கிய மொழிபெயர்ப்பிலிருந்து வேறுபட்ட விஷயம்தான். எதை நீங்கள் மொழிபெயர்க்கிறீர்கள் என்பதையும் பொறுத்த விஷயம் அது. இப்போது செய்தித்தாள் அலுவலகத்தில் Reuters அல்லது PTI news உங்களுக்கு வருகிறது. அதை நீங்கள் ஒரு தமிழ் நாளிதழுக்காக நியூஸ் எடிட்டரோ சப் எடிட்டரோ தமிழில் மொழிபெயர்க்கிறார். அதை நீங்கள் authentic-ஆக மொழிபெயர்க்கவேண்டும். அதுதான் முக்கியம். அந்த நியூஸ் ஐட்டத்துக்கு பெரிய artistic value எதுவும் கிடையாது. அது ஒரு விஷயத்தை சொல்கிறது. அப்புறம் பாடப் புத்தகங்கள். கல்வி சார்ந்த மொழிபெயர்ப்புகள், செய்திகள், வரலாறு இவை எல்லாவற்றிலுமே புனைவுக்கும் இவற்றுக்கும் இருக்கிற முக்கியமான விஷயம் என்னவென்றால் சொல்லும் வழிமுறை (way of telling). Implied –ஆக இருக்கும் பல விஷயங்கள் புனைவில் உண்டு. சொல்லாத விஷயங்கள், மிகவும் பூடகமான விஷயங்கள். இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் புனைவுக்கே உரித்தான விஷயங்கள். இரண்டையும் நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கவே கூடாது. இரண்டுமே அச்சில் வருகின்றன என்பதால் புனைவும் அபுனைவும் ஒன்று கிடையாது. கண்டிப்பாக அவை chalk and cheese மாதிரிதான். எப்படி பவுலிங்கையும் பேட்டிங்கையும் ஒப்பிட முடியாதோ அப்படிதான் இதுவும். இலக்கிய மொழிபெயர்ப்பாளர் இதை செய்யமுடியாதா என்றால் அப்படியெதுவும் கிடையாது. அவரும் இதைச் செய்யலாம், இவரும் அதைச் செய்யலாம். அதற்கு தகுதியானவராக உங்களை நீங்கள் வைத்துக்கொள்ளவேண்டும். அவ்வளவுதான்.
கேள்வி – தடித்த அகராதிகள் பற்றி உங்கள் கருத்து என்ன? உங்களுக்குப் பிடித்த அகராதி எது?
பதில் - அகராதிகள் எப்போதுமே தேவைக்கேற்றவைதான். என்னிடம் எத்தனை அகராதிகள் இருக்கின்றன என்று பாருங்கள். Original Oxford Dictionary எத்தனை வால்யூம் தெரியுமா? 22 வால்யூம். இப்போது அவற்றை பிரிண்ட் பண்ணுவதே இல்லை. இப்போது மார்க்கெட்டில் இருப்பவை கூட ஏற்கனவே பிரிண்ட் பண்ணப்பட்டவைதான். இப்போது பிரிண்டே கிடையாது. CD ஆகத்தான் வருகிறது. City Bank –இல் அந்த ஒரிஜினல் அகராதியை வாங்குவதற்கு லோன் தருவார்கள் தெரியுமா? சின்னப்பிள்ளைகளுக்கு நர்சரி ஸ்கூல் டிக்க்ஷனரி, ஹை ஸ்கூல் டிக்க்ஷனரி என்றெல்லாம் இருக்கும். அகராதி என்பது ஒன்றில்லை. பலவிதமான அகராதிகள் இருக்கின்றன. அதாவது அகராதி என்பது வருடந்தோறும் புதுப்பித்து வரவேண்டிய ஒரு விஷயம். புதிதாக நிறைய சொற்கள் வந்துகொண்டே இருக்கும். பிரபலமான அகராதி எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். மிகப் பிரபலமான அகராதி COD (Concise Oxford Dictionary) என்று சொல்கிறார்கள். எனக்குத் தெரிந்து மூன்று வருடங்களுக்கு ஒருமுறை அதன் புதிய பதிப்பு வந்துகொண்டே இருக்கும். மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புதிதாக 200 சொற்கள் உள்ளே சேரும். Obsolete ஆகப் போய்விட்ட பல சொற்களை எடுத்துவிடுவார்கள். ஆனால் சில அகராதிகள் உண்டு. எதையுமே வெட்டாமல் அளவில் பெரிதாகிப் போய்க்கொண்டே இருக்கும். உங்கள் தேவைக்கேற்றபடி அந்த அகராதியை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மொழிபெயர்ப்பாளர் அகராதி என்றும் ஒன்று உண்டு. தமிழில் அதுபோல் எதுவும் கிடையாது. ஆங்கிலத்தைப் பற்றிப் பேசும்போது தமிழில் இருக்கும் சூழலை சொல்லாமல் இருக்க முடியாது. இன்றைக்கும் தமிழில் இருக்கிற பெஸ்ட் டிக்ஷனரி என்பது மெட்ராஸ் யுனிவர்சிடியுடைய டிக்ஷனரி. இதில் மிகவும் பெருமையாக 2010 என்று போட்டிருக்கிறார்களே தவிர உண்மையில் இது 2010-ல் வந்ததில்லை. 1963 -ஆம் வருஷம் வந்தது. அதற்குப் பிறகு இதை திருத்தம் செய்யவே இல்லை. சிதம்பரநாதன் செட்டியார் எடிட்டராக இருந்து உருவாக்கியது. பெரிய டீம் ஒர்க் அது. 1963-இல் எப்படி வந்ததோ அதை மறுபடியும் மறுபடியும் அப்படியே ரீபிரிண்ட் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இது எவ்வளவு அபத்தம். யோசித்துப் பார்க்கையில் இரத்தம் கொதிக்கும். ஆனால் இன்னும் இதுதான் நல்ல அகராதியாக இருக்கிறது. எப்படி என்றால் ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு மிக நல்ல அகராதி. ஒரு சொல்லுக்கு அத்தனை விதமான அர்த்தங்கள் மட்டுமல்ல, அதற்கு நிகராக அவ்வளவு தமிழ்ச்சொற்களைச் சொல்வார்கள். 1963-க்கு பிறகு ஏறத்தாழ அறுபது வருடங்கள் ஆகிவிட்டன. இந்த அறுபது வருடங்களில் எத்தனை புதிய தமிழ்ச்சொற்கள் உருவாகியிருக்கின்றன? எத்தனை ஆங்கிலச் சொற்கள் வந்திருக்கின்றன? அதையெல்லாம் சேர்த்தீர்கள் என்றால் இந்த ஒரு அகராதியை இதைப் போல நான்கு மடங்கு பெரிய அகராதியாக ஆக்கிவிடலாம். இத்தனைக்கும் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வந்து, தமிழுக்கென்று ஒரு யுனிவர்சிடி வந்து, தமிழை வைத்தே அரசியல் நடத்திக்கொண்டிருக்கிற இந்த ஒரு சூழலில் up to date ஆன ஒரு தமிழ் அகராதி நம்மிடம் இல்லை என்பதுதான் அவலம். ஒரு ஆங்கில வார்த்தைக்கு தமிழில் என்ன அர்த்தம் என்று சொல்வதற்கு மாத்திரம் இல்லை அகராதி. ஒரு அகராதியின் பங்கு என்பது மிகவும் முக்கியமானது. ஒரு மொழி உயிர்த்துடிப்புடன், உயிர்ப்புடன் இருக்கிறது என்பதற்கான அடையாளம்.
கேள்வி – அடுத்து கவிதை மொழிபெயர்ப்பு. கவிதைகள் மொழிபெயர்ப்பில் விருப்பம் இல்லாமல் இருக்கிறீர்களா? அல்லது அடிப்படையிலேயே ஆர்வமில்லையா?
பதில் – நான் நம்புகிற விஷயங்கள் என்று சொன்னேன் அல்லவா? கவிதைகளை மொழிபெயர்க்கமுடியும் என்று நான் நம்பவில்லை. நான் நம்பவில்லை. யாராலும் பண்ணமுடியாது என்று சொல்லவில்லை. காரணம் இரண்டு விஷயங்கள். கவிதையின் கவித்துவத்தை மொழிபெயர்க்க முடியுமா என்று எனக்கு சந்தேகம். இரண்டாவது நான் இயல்பிலேயே ஒரு கவிஞன் கிடையாது. அதனால் I will never indulge in translating a poetry. கவிதையிலேயே தோய்ந்திருக்கிற ஒரு மனம் மிக அழகாக கவிதையை மொழிபெயர்ப்புக்குள் கொண்டுவர முடியும். உதாரணத்துக்கு சுகுமாரன். இயல்பிலேயே அவர் ஒரு கவிஞர். நெருடாவுடைய கவிதைகளை எல்லாம் அவர் மொழிபெயர்த்திருக்கிறார். அந்தக் கவிதைகளை நீங்கள் பார்க்கும்போதே தெரிந்துவிடும். அவருக்கு நெருடா அவ்வளவு நெருக்கமான ஒரு கவிஞர். அதனால் நெருடாவுடைய கவித்துவத்தைக் கொஞ்சமும் குறைக்காமல் அவரால் தமிழில் மொழிபெயர்க்க முடிகிறது. அது மிகவும் அபூர்வம்தான். பெரும்பாலும் தமிழில் கவிதைகள் மொழிபெயர்ப்பு ஏன் அதிகம் வருகின்றன என்றால் அது மிகவும் சிறியதாக இருக்கிறது. நானும் மொழிபெயர்க்கிறேன் என்று உள்ளே நுழைபவர்களுக்கு எளிது. இருபது பக்க சிறுகதை ஒன்றைக் கொடுத்தால் பெண்டு நிமிர்ந்துவிடும். கவிதையை மொழிபெயர்ப்பது எளிது என்று நிறைய பேர் அதைச் செய்கிறார்கள். ஆனால் அது கவிதையாக இருக்கிறதா என்பதுதான் கஷ்டம். பல பேர் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பதையும் பார்க்கிறேன். நிறைய ஆங்கிலப் பேராசிரியர்கள் தமிழில் இருக்கும் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறேன் என்று வரிந்துகட்டிக்கொண்டு இறங்கிவிடுவார்கள். அது மிகவும் பயங்கரமாக இருக்கும். ஏன் என்றால் பெரும்பாலும் இந்த மாதிரி ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு வீட்டில் ஹிண்டு, எக்ஸ்பிரஸ் இவற்றையெல்லாம் படித்துக்கொண்டு வகுப்பில் மாணவர்களுக்கு நோட்ஸ் கொடுத்துக்கொண்டு, காம்போசிஸனை சரியாக இலக்கணப்பிழையின்றி ஆங்கிலத்தில் எழுதித் தருபவர்கள். அவர்களால் ஒரு இலக்கியப்பிரதியை கவிதையை மொழிபெயர்க்க முடியும் என்பதற்கு எந்த வித உத்திரவாதமும் கிடையாது. அது அவர்களுக்குப் புரிவதே கிடையாது. ஆசிரியர்களுக்குப் புரியும் என்ற நம்பிக்கையும் எனக்கில்லை.
கேள்வி – மொழிபெயர்ப்பாளதன் படிப்படியான பின்னணியை நீங்கள் சொல்லிவிட்டீர்கள். உங்கள் முதல் மொழிபெயர்ப்புக்கும் இப்போது நீங்கள் செய்யும் மொழிபெயர்ப்புக்கும் என்ன வேறுபாட்டை உணர்கிறீர்கள்? அதில் எவ்வளவு சவால்கள் நிறைந்திருக்கின்றன? அதை எப்படி நீங்கள் எதிர்கொள்கிறீர்கள்?
பதில் – நிறைய. You always change with your age. நான் வெகு காலமாக மொழிபெயர்ப்பில்
ஈடுபட்டிருக்கவில்லை. 2002 முதல்தான் செய்கிறேன். என்னுடைய ஆரம்பகால
மொழிபெயர்ப்புகளைப் பார்க்கும்போது அதற்கும் இதற்கும் சில நுட்பமான வித்தியாசங்கள்
இருக்கின்றன. இன்னொன்று, நான் போன வருஷம் மொழிபெயர்த்த ஒரு கதையை இந்த
வருஷம் கொடுத்து புதிதாக என்னை மொழிபெயர்க்கச் சொன்னால் அப்படியே 100% அப்படியே
பண்ணமுடியும் என்று தோன்றவில்லை. நீங்கள் இதை அப்படியே நீட்டித்துக்கொண்டே
போகலாம். ஒரு வருஷம் என்று கூட இல்லை. இந்த இடத்தில் பொருத்தமில்லாத ஒரு விஷயம்
ஞாபகத்துக்கு வருகிறது. இளையராஜாவுடன் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு காட்சிக்கான பின்னணி
இசையை எப்படி நீங்கள் உருவாக்குகிறீர்கள் என்று கேட்டதற்கு, ஸ்கிரீனில் நான்
பார்க்கும்போது எனக்கு எந்த மியூசிக் தோன்றுகிறதோ அதை நான் அப்படியே எழுதி இசையமைத்திடுவேன்
என்கிறார். கௌதம் வாசுதேவ் மேனன் கேட்கிறார், சரி, அதே காட்சியை அடுத்த நாள் அல்லது அடுத்த வாரம்
உங்களுக்குப் போட்டுக் காண்பித்தால் இதே இசையைத்தான் நீங்கள் அமைப்பீர்களா என்றால்
இல்லை, கிடையாது. அடுத்த
நாள் எனக்கு வேறு மாதிரியாகக் கூடத் தோன்றும். அடுத்த வாரம், அடுத்த வருஷம்
வேறுமாதிரியாகத் தோன்றும் என்றார். இது எல்லாவற்றுக்கும் பொருந்தும். இது
மொழிபெயர்ப்புக்கும் பொருந்தும். இது மனநிலையைப் பொறுத்த விஷயம். Utmost happiness நான்
மொழிபெயர்த்து ஏறக்குறைய இரண்டு வருஷங்கள் ஆகிவிட்டது. மொத்தமும் முடித்துவிட்டேன்.
இப்போது revise பண்ணிக்கொண்டிருக்கிறேன். இரண்டு வருஷங்களுக்கு முன்பு நான் பண்ணிய, நான் மிகச்சரியாக
பண்ணியிருக்கிறேன் என்று நினைத்திருக்கிற பல வாக்கிய அமைப்புகளை இப்போது மாற்றித்
திருத்திக்கொண்டிருக்கிறேன். இது எதைக் காட்டுகிறது? இதுதான் சரி என்று எதுவுமே நிரந்தரம் கிடையாது.
இன்றைய தேதிக்கு நான் இரண்டு வருஷங்களுக்கு முன்னால் பண்ணிய வாக்கிய அமைப்பு
அவ்வளவு சரியில்லை என்று தோன்றுகிறது. ஒருவேளை இரண்டு வருஷங்களுக்குப் பிறகு, புத்தகம்
வந்ததற்குப் பிறகு, அடுத்தப் பதிப்புக்கு மறுபடியும் நான்
படிக்கும்போது சில வாக்கியங்களை மாற்றலாம், மாறும். வே.ஸ்ரீராம் இருக்கிறாரில்லையா? அவர் திரும்பத்திரும்ப
அந்நியன ஒவ்வொரு பதிப்பு வரும்போதும் ஒவ்வொரு பதிப்புக்கும் இல்லையென்றாலும் பல
முறை திருத்திய பதிப்புதான் வெளிவருகிறது. ஆர்.சிவக்குமாருடைய மொழிபெயர்ப்பு பற்றி
சொல்லவேண்டும் என்றால் காஃப்காவுடைய உருமாற்றம் பல வருஷங்கள் கழித்து மறுபடியும்
ரீபிரிண்ட் வந்துள்ளது. ரீபிரிண்ட் வந்தபொழுது நிறைய அவர் மாற்றினார்.
கேள்வி - வாசிக்கும்போது மொழிபெயர்ப்பில் நிறைய பிழைகளை இப்போது புதிதாகக் கண்டுபிடிக்கிறார்கள். அது எந்த அளவுக்கு சரி? பிழைகளோடுதான் ஒரு படைப்பை அணுகவேண்டுமா? ஏனென்றால் ஒரு மொழிபெயர்ப்பாளர் மிகுந்த போராட்டத்துக்குப் பிறகுதான் ஒரு படைப்பைக் கொண்டுவருகிறார்கள். வாசிக்கும்போதே நான் பிழைகளைக் கண்டுபிடிக்கப்போகிறேன் என்று வாசிப்பது போன்ற சூழ்நிலை இந்த மொழிபெயர்ப்பில் இருப்பது போல் சின்ன ஒரு எண்ணம்.
பதில் – இதில் பல
விஷயங்கள் அடங்கி இருக்கின்றன. இதைப் பற்றி ஒரு சொற்பொழிவே ஆற்றவேண்டிய அளவுக்கான
ஒரு விஷயம். மிகப் பெரிதாகப் போய்விடும். இந்தக் கேள்விக்கான பதில் A, B, C, D என்று நிறைய
தளங்களில் சொல்லிக்கொண்டே போகலாம். மிகவும் விரிவாகப் போய்விடும். சுருக்கமாக
சொல்கிறேன். அதாவது குறை கண்டுபிடிப்பதற்கென்றே படிப்பவர்களைப் பற்றி நாம் எதுவும்
சொல்வதற்கில்லை. அதற்கு பலவிதமான காரணங்கள் இருக்கலாம். “இவன் என்ன, மொழிபெயர்ப்பாளன்தானே?
இவனுக்கென்ன பெரிய இது? இவன் ஒரிஜினலாக
எழுதுபவனா?” என்ற எரிச்சல் எல்லோருக்குமே உண்டு. ஒரிஜினலாக எழுதுபவன் எப்போதுமே உசத்தி.
இவன் மொழிபெயர்ப்பாளன். ஏற்கனவே எழுதியதைத்தானே தமிழில் கொண்டுவருகிறான். அவனை ஒரு
எழுத்தாளன் என்று கூட சொல்லக்கூடாது. He is only a
translator என்று சொல்வதில்
ஒரு சந்தோஷம் இருக்கிறது. இருந்துவிட்டுப் போகட்டும். நான் என்னை ஒரு translator என்று
அறிமுகப்படுத்திக்கொள்வதில் எனக்கு கூச்சமே கிடையாது. Yes,
I am a translator. ஹிண்டு
பேட்டியில் நான் நாவல் எழுத மாட்டேன் என்றே நான் சொன்னேன். நான் ஒரு படைப்பாளி
கிடையாது என்பதில் எனக்கு எந்த கூச்சமும் கிடையாது. வெறும் மொழிபெயர்ப்பாளன் என்ற
அடையாளத்துடன் இருப்பது எனக்குப் போதுமானது. இது ஒரு விஷயம். ஜெயமோகன், கனடா இலக்கியத்
தோட்ட விருதை போயும் போயும் ஒரு மொழிபெயர்ப்பாளருக்குக் கொடுத்திருக்கிறார்கள்
என்றார். அந்த போயும் போயும் ஒரு மொழிபெயர்ப்பாளர் என்பது எப்படியென்றால்
நானெல்லாம் ஒரு படைப்பாளி, ஒரு படைப்பாளிக்குக் சமமாக ஒரு இயல் விருதை ஒரு மொழிபெயர்ப்பாளருக்குக் கொடுக்கிறீர்களே என்ற ஒரு மேட்டிமைத்தனம் . ஒரு கிரியேடிவ் ரைட்டருக்கு, தன்னைவிட
மொழிபெயர்ப்பாளர் ஒரு படி, இரண்டு படி
அல்லது மூன்று படி தாழ்வானவன்தான் என்று தோன்றினால் அது அவனுடைய பிரச்சனை. அதைப்பற்றி நான்
எதுவும் சொல்வதற்கில்லை. மறுபடியும் கிரிக்கெட் உதாரணத்தைச் சொல்லப்போனால் ஒரு
பேட்ஸ்மேன் பவுலரைப் பார்த்து, “நான்தான் ஹீரோ, நான் பேட்டிங் பண்ணுவதற்குதான் எல்லாரும் கை
தட்டுகிறார்கள் என்று சொன்னால் பவுலர் சொல்வான், Bowler
wins matches. நான் விக்கெட்
எடுத்தால்தான் மேட்சை வெற்றிகொள்ள முடியும். அது அப்படியல்ல. பவுலர் உசத்தியா
பேட்ஸ்மேன் உசத்தியா என்று ஒன்றுமில்லை. அதே மாதிரிதான். அப்புறம் மொழிபெயர்ப்பில்
தப்பு கண்டுபிடிக்கக்கூடாதா என்றால் தாராளமாய்க் கண்டுபிடியுங்கள். அதில் தப்பே
கிடையாது. என்னுடைய மொழிபெயர்ப்பிலும் தப்பு கண்டுபிடித்திருக்கிறார்கள், சொல்லியிருக்கிறார்கள்.
சமீபத்தில் காலச்சுவட்டில் வந்த ரேமன்ட் கார்வருடைய கதையில் ‘nuts’ என்பதை நான் ‘கொட்டை’ என
மொழிபெயர்த்தது ஒருத்தருக்குப் பிடிக்கவில்லையாம். அதைப் படித்தவுடனே ஏதோ
கெட்டவார்த்தை போல இருந்ததாம். புத்தகத்தை மூடிவைத்துவிட்டாராம். அது அவருடைய
பிரச்சனை. கொட்டை என்பது அவருக்கு வேறு ஏதோ ஆபாசமான சொல்லாகத் தெரிகிறதாம்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சொல் எப்படி ஆபாசமாகத் தோன்றுமா இல்லை வேறுமாதிரி தோன்றுமா
என்றெல்லாம் பார்த்துப் பண்ணமுடியாது. ஆங்கிலத்திலும் ‘nut’
என்றால் வேறு ஒரு
அர்த்தம் உள்ளது. ‘லூசு’ ‘கிறுக்கன்’ என்பதை ‘nut’ என்பார்கள். நான் அதை ‘பருப்பு’ என்றுதான் எழுதியிருக்க வேண்டுமாம். இது ஒரு
முடிவிலி. இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. உங்களுக்கு
எது சரி என்று தோன்றுகிறதோ அதை செய்கிறீர்கள். அதே மாதிரி Tobias Wolff –ன் Bullet in the brain சிறுகதை மிக
முக்கியமான ஒரு கதை. புதிய எழுத்து மனோன்மணி என்னிடம் அந்தக் கதையை மொழிபெயர்க்கச்
சொல்லிக் கொடுத்தார். மிகச்சிறிய கதை. ஆங்கிலத்தில் ஏகப்பட்ட விருதுகள் வாங்கிய
பரிசு பெற்ற கதை. கதை என்னவென்றால் வங்கியில் ஒரு கொள்ளை நடக்கும். அப்போது அந்த
ஹீரோவை வங்கிக் கொள்ளையன் சுட்டுவிடுவான். தலையில் அந்தக் குண்டு பட்டு வெளியில்
தெறிப்பதற்கு எத்தனை மைக்ரோ செகண்ட்ஸ் ஆகியிருக்கும்?
இந்தக்
கதை முழுக்க அமெரிக்க வசைச் சொற்கள் நிறைந்திருக்கும். குறிப்பிட்ட வட்டாரத்தில், அல்லது ஒரு நாட்டில்
மட்டும் புழங்கும் வசைச் சொற்களைத் மொழிபெயர்ப்பது மிகவும் சிக்கலானவிஷயம். எனவே அவற்றை தமிழில் மிகச்சரியாக சொல்லமுடியாத வசைச்சொற்களை ஆங்கிலத்திலும், ஓரளவு தமிழில் சொல்லக்கூடியவற்றை தமிழிலும் எழுதியிருந்தேன். மிக ஆபாசமான வசனங்கள்தான். ஆனால் அதை அப்படியே நீங்கள் கனலியில் வெளியிட்டிருந்தீர்கள். கனலியில் வெளியிட்டது சரியான வடிவம்.
ஆனால் முதலில் பலவிதமான
சித்திரவதைகளுக்குள்ளானது அந்தக்கதை.
எப்படியென்றால் முதலில் ஒரு இலக்கியப்பத்திரிகைக்கு அனுப்பினேன். அந்தப் பத்திரிகை ஆசிரியரும் ஒரு இலக்கியப் படைப்பாளிதான். இதென்ன இவ்வளவு கெட்ட கெட்ட வார்த்தைகளாக இருக்கின்றன என்று அவர் வெளியிடவே இல்லை. இன்னொரு பத்திரிகையில் பாதி எடிட் செய்து வெளியிட்டார்கள்.
பண்ணவில்லை.
பிறகு உயிர்மையில் அது ஒருமாதிரி sanitize செய்யப்பட்டு வெளிவந்தது. இந்த மாதிரியான தமாஷ் எல்லாம் நடந்தது.
அதில் என்மேல் ஒரு விமர்சனமும் வந்தது,
நான் சரியாக அந்தச் சொற்களை மொழிபெயர்க்கவில்லை என்று.
என் கையை மீறி நடந்த விஷயம். இதற்கெல்லாம் நான் சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கமுடியாது. மொழிபெயர்ப்பை மூலத்தோடு ஒப்பிட்டு விமர்சிப்பது தப்பே கிடையாது.
ஆனால் “நீ சொன்ன ஒரு வார்த்தை எனக்கு அப்படியே கூச்சத்தை ஏற்படுத்துது. கொட்டைன்னு எழுதிட்டியேப்பா” என்பதற்கெல்லாம் பதில் சொல்லமுடியாது.
மொழிபெயர்ப்புகள்விமர்சனங்களுக்குஅப்பாற்பட்டவையேஅல்ல. ரஷ்ய கிளாசிக்குகளின் மொழிபெயர்ப்புகள்
பற்றி நபக்கோவ் விமர்சிக்காததா? காஃப்காவுக்கு எத்தனை மொழிபெயர்ப்புகள் வந்திருக்கின்றன. மோசமான மொழிபெயர்ப்புகள் என்பவை இன்னொரு விஷயம். நுட்பமான வாசகனுக்கு அதைப் படிக்கும்போதே கண்டுபிடித்துவிட முடியும். மொழிபெயர்ப்பை படிப்பது வறட்சியாக இருக்கிறது, மனத்தில் ஒன்றவே இல்லை என்பவையெல்லாம் பொதுவாகவாசகர்களிடம் இருக்கும் மேம்போக்கான கருத்து. Again, இதைப்பற்றி பேசினால் மிகவும் விரிவாகப் பேசவேண்டியிருக்கும்.
நானும் நிறைய எழுதியிருக்கிறேன். Spoon feeding மாதிரியே எல்லாம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் தவறு.
நான் கவனித்தவரையில், தமிழ்வாசகர்களுக்கு, ஆங்கிலத்தில் ஒரு கதையோ கட்டுரையோ
எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதில் அவர்களுக்கு பிரச்சனையே இல்லை,
சந்தோஷமாக படித்துக் கொள்கிறார்கள். ஆனால் அதையே நீங்கள் தமிழில் சொல்லும்போது மிகவும் எளிமையாக,
இருந்தால்தான்
அது சரியான மொழிபெயர்ப்பு என்றொரு நம்பிக்கை இருக்கிறது. மொழிபெயர்ப்புக்கென்று அவர்கள் மனத்துக்குள் ஒரு அளவுகோல் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். எப்படியென்றால் எளிதில் புரியும்படி இருக்கவேண்டும். தமிழ்நாவல் படிப்பதுபோலவே இருக்கவேண்டும். எளிதில் புரியும்படி இருக்கவேண்டும் என்று நீங்கள் பா.வெங்கடேசனிடம் சொல்வீர்களா? பிரம்மராஜனிடம்? கோணங்கியிடம்? சொல்லமுடியுமா? கோணங்கியுடைய எழுத்தை உங்களால் ஏற்றுக் கொள்ளமுடிகிறது. பா.வெங்கடேசனுடைய தாண்டவராயன் கதையை மிகவும் கடினமாக இருந்தாலும் அது அவருக்கேயுரிய தனித்துவ
நடை என்று உங்களால் ரசிக்கமுடிகிறது. ஆனால்
ஓரான் பாமுக் கதையை எளிதாகப் படிக்க முடியவில்லை என்கிறீர்கள். இதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஆனால் இந்த இடத்தில் ஒன்றைச்
சொல்ல வேண்டும். இதைப்போல மொழிபெயர்ப்பு மிகவும் கடினமாக இருக்கிறது என்று இலங்கைத்
தமிழ் வாசகர்கள் யாரும் என்னிடம் சொன்னதேயில்லை. புகார் சொல்வதெல்லாம் மெயின்லேண்ட்
தமிழர்கள்தான். எனக்கென்னவோ, பாமுக் மொழிபெயர்ப்புகளுக்கு
இலங்கையிலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும்தான் அதிக வாசகர்கள் இருக்கிறார்களோவென்று
தோன்றும். ஒரு மொழிபெயர்ப்பு எளிமையாக இருப்பதையும் கடினமாக இருப்பதையும் மொழிபெயர்ப்பாளர் முடிவு செய்வதில்லை. மூலப்படைப்பு முடிவு பண்ணுகிற விஷயம். என்னுடைய நண்பர் மறைந்த கவிஞர் நா,முத்துக்குமார் திரைப்படப் பாடலாசிரியர், நிறைய வாசிப்பவரும் கூட.
அவர் மறைவதற்கு சில நாட்கள் முன்பு ஒரு சந்தர்ப்பத்தில் என்னிடம் ஒரு கடுமையான குற்றச்சாட்டை வைத்தார். “ஜி.கே. நீங்க முரகாமியை மொழிபெயர்க்கும்போதெல்லாம் சரியாக பண்ணுறீங்க. ஆனால் பாமுக்கை பண்ணும்போது என்னால் உள்ளே நுழையவே முடியவில்லை” என்றார். நானும் முத்துக்குமாரும் கடைசியாக சந்தித்துப் பேசிய அந்த உரையாடல் சண்டையில்தான் முடிந்தது. இன்னமும் என்னை உறுத்திக் கொண்டிருக்கும் விஷயம் அது.
இறந்து போகப்போகிறார் என்று எப்படித்தெரியும்? நண்பர் அவர். “முரகாமியின் மொழிபெயர்ப்பு எளிமையாய் இருப்பதற்குக் காரணம், நான் முரகாமிக்கென்று தனி பேனா,
தனி கையால் எழுதுவதில்லை. பாமுக்குக்கென்று தனி பேனா, தனி கை என்று என்னிடம் இல்லை. நீங்கள்படித்தவர்தானே? முரகாமியையும் பாமுக்கையும் ஆங்கிலத்தில் படிங்க.
இருவரும் ஒரே மாதிரியாகவா எழுதுகிறார்கள்? மொழிபெயர்ப்பு என்பது உங்களுக்குப் பாடம் நடத்துவது கிடையாது.
முரகாமியையும் பாமுக்கையும் சிலபஸ்ஸில் வைத்து நானொரு ஆங்கில விரிவுரையாளனாக கல்லூரியில் இருந்தால் அந்த மாணவர்களுக்கு நான் அந்தக் கதைகளை எளிமையாக விளக்கி அவர்களுக்கு நோட்ஸ்கூட கொடுப்பேன். ஆனால் ஒரு வாத்தியார் பண்ணும் வேலை கிடையாது,
ஒரு மொழிபெயர்ப்பாளனின் வேலை” என்று சொன்னேன்.
அவர் சமாதானமாகவில்லை.
இன்னொன்று இருக்கிறது. அதைச் சொல்லவே சங்கடமாக உள்ளது.
வாசகர்கள் பலருக்கும் ஒரு மோசமான மொழிபெயர்ப்புக்கும், சிறப்பாக செய்யப்பட்ட ஒரு கடினமான
நாவலுக்கும் இடையெ இருக்கும் வித்தியாசத்தை உணராமல் இருப்பது. . உடைந்தகுடை – மிகவும் கடினமான ஸ்கிரிப்ட். மூலமே மிகவும் கடினமானது. அதைப் படிக்கவே முடியவில்லை என்று ஆரம்பநிலை வாசகன் சொன்னால் புரிந்துகொள்ளலாம். ஆனால்
சில எழுத்தாளர்களே அப்படிச் சொல்வது வியப்பாக
இருக்கிறது. வாசிப்புப் பயிற்சியற்ற ஒருவன் ஏதோ ஒரு முன்தீர்மானத்துடன் புதக்கத்துக்குள் வருகிறான். இது என்ன உள்ளேயே நுழைய முடியவில்லையே என்று அவனுக்குத் தோன்றுவது இயல்பானது.
ஆனால் இலக்கிய வாஸகர்கள் சிலரும் அப்படிச் சொல்வது நம்மிடியே ஒரு மொழிபெயர்ப்பை எப்படி
அணுகுவது என்ற பார்வை இல்லாததே என்று எனக்குத் தோன்றுகிறது. இத்தனைக்கும் அது மிகவும் authentic –ஆன ஒரு மொழிபெயர்ப்பு. என்னுடைய மொழிபெயர்ப்பையே ஒரு authentic மொழிபெயர்ப்பு என்று உதாரணமாகச் சொல்ல எனக்கு கூச்சமாக இருக்கிறது, வேறு வழியில்லை. மிகச்சரியாக செய்யப்பட்ட மிகக்கடினமான மொழிபெயர்ப்பு ஒன்றை எடுத்துக்கொள்வோம். அதை சரியாகத்தான் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
ஆனால் அதை வேகமாக வாசிக்கும்போதே எளிமையாக வெள்ளிடைமலை போல புரியவேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஏனென்றால் மூலப்படைப்பே சிக்கலான நடையில்
இருக்கும்.
ஆனால் மோசமான மொழிபெயர்ப்பின் விஷயமே வேறு. அந்த மொழிபெயர்ப்பாளருக்கு ஆங்கிலமும் சரியாகத் தெரிந்திருக்காது, மூலத்தையும்சரியாகஉள்வாங்கியிருக்கமாட்டார், அவருக்கு தமிழும் ஒழுங்காக எழுதத் தெரிந்திருக்காது. இதற்கு உதாரணங்கள் நிறைய சொல்லலாம். வாக்கிய அமைப்பு கடாமுடாவென்று இருக்கும்,
அவருக்கு சரியாகப் புரியாத இடத்தை ambigousஆக, குழப்படியாக மொழிபெயர்த்திருப்பார், அல்லது சொந்தமாக
எதையாவது உத்தேசமாக எழுதியிருப்பார். மூலத்தில் அந்த மாதிரியெல்லாம் இருந்திருக்கவே இருந்திருக்காது. இது எதுவுமே தெரியாத ஒரு வாசகருக்கு மோசமாக மொழிபெயர்க்கப்பட்ட பிரதியும்,
சரியாக மொழிபெயர்க்கப்பட்ட கடினமான பிரதியும் ஒன்றாகத்தான் தெரியும். ஆனால் நுட்பமான வாசகனுக்கு இது மொழிபெயர்ப்பில் இருக்கும் கோளாறு என்பதைப் புரிந்து கொள்ளமுடியும். எல்லோராலும் முடியாது. ஒரு மொழிபெயர்ப்பு படிப்பதற்கு கடினமாக இருக்கிறது என்று ஒருவர் சொன்னால் அதற்குப் பின்னால் பல விஷயங்கள் இருக்கும். அந்த ஸ்க்ரிப்ட் அப்படி இருக்கலாம் அல்லது மொழிபெயர்ப்பாளர் மோசமாக இருக்கலாம்.
கேள்வி
–கண்டிப்பாகசார்.
இன்னொரு கேள்வி. நாவல் எழுதுவதைப் பற்றி சொல்லியிருந்தீர்கள். இந்து பேட்டியில்கூட சொல்லியிருந்தீர்கள், நாவல் எழுதமாட்டேன் என்று. அதைப்பற்றியதுதான். மொழிபெயர்ப்பைத் தவிர்த்து சுயபடைப்பாக நாவலோ,
சிறுகதைத் தொகுப்போ எழுத வாய்ப்பிருக்கிறதா? அதோடு இன்னொரு கேள்வியும். பெரும்பாலான எழுத்தாளர்கள் நிலத்தை அடிப்படையாய் வைத்துதான் எழுதுகிறார்கள். நீங்கள் ஆரணி என்ற இந்த ஊரில் பிறந்து இங்கேயே வளர்ந்து இங்கேயே இருக்கிறீர்கள். இதை அடிப்படையாய் வைத்து ஒரு நாவலோ அல்லது தொகுப்போ எழுதவேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? கனவுகள்இருக்கின்றனவா?
பதில்
– மிகவும் பர்சனலான ஒரு இடத்தைத் தொட்டுவிட்டீர்கள். உண்மையிலேயே இருக்கிறதுதான். நான் நாவல் எழுதமாட்டேன் என்றும் சொன்னதற்குக் காரணமே திமிர்தான். ஏனென்றால் படைப்பாளிகளுள் மொழிபெயர்ப்பாளனை ஒரு இரண்டாந்தரக் குடிமகன் மாதிரி பேசுவதைக் கேட்பதால் உண்டான எரிச்சல், அதனால்தான்,
நீ என்னய்யா என்னை இரண்டாந்தரக் குடிமகன் என்று சொல்வது? நானேசொல்கிறேன். நான் வெறும் மொழிபெயர்ப்பாளன்தான். இதி எனக்கு எந்த இழிவும் இல்லை,
இதை சொல்லிக்கொள்வதில் எந்தக் கூச்சமும் இல்லை. பல மொழிபெயர்ப்பாளர்கள் விரைவில் சொந்தமாக ஒரு பெரிய நாவல் எழுதப்போகிறேன், பார்த்துக்கொண்டெ இருங்கள்,
என்பார்கள். அவர்களுக்கு உண்மையிலேயே சொந்தப் படைப்பில் ஆர்வம் இருக்குமென்றால் ஓகே.
ஆனால் வெறும் மொழிபெயர்ப்பாளன் என்று அழைக்கப்படுவதால்
ஏற்பட்ட கூச்சத்தில் சொல்வதாக இருந்தால் அது அபத்தம். அது என்ன பதவி உயர்வா?
ஒரு மொழிபெயர்ப்பாளர் நாவல் எழுதுவதும் சிறுகதை எழுதுவதும் பதவி உயர்வெல்லாம் கிடையாது.
நீங்கள்சொன்னதுபோலநிலம்சார்ந்தசிலவிஷயங்கள்எனக்குஇருக்கின்றன. இந்தநிலத்திலேயேபிறந்துவளர்ந்தஎனக்குஎப்படிஇல்லாமல்இருக்கும்? சிலஇடங்கள்உள்ளன. படைவீடு அமைந்திருக்கும் நிலப்பரப்பே
அலாதியானது. சரித்திர எச்சங்களும், புனைவுகளுக்கான கூறுகளும் கொடிக்கிடக்கும் ஸ்தலமாகத்
தோன்றும். மிகவும் முக்கியமான இன்னும் ஒரு இடம் சத்ய விஜய நகரம். ஜாகிர்தாருடையவரலாறு இன்னும் தமிழ்
இலக்கியத்தில் பதிவு செய்யப்படவே இல்லை. அது எனக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிற ஒரு விஷயம்.
அவர்களுடைய பங்களா தெரியுமல்லவா, அதற்குப் பின்னாலிருக்கும் சரித்திரம் பெரியது. அவர்களுடைய
பூசிமலைக் குப்பம் கண்ணாடி பங்களா அலாதியானது.
அதன் பின்னால் ஒரு மகத்தான நாவல் இருக்கிறது. ஜாகிர்தாருடைய பேத்தி சம்ஹிதா ஆரணி ஆங்கிலத்தில்
எழுதும் ஒரு முக்கியமான எழுத்தாளர். என் நண்பர். அவளைக் கூட்டிவந்து
அவள் மூதாதையர்களின் அரண்மனையையும் பூசிமலைக்குப்பம் பங்களாவையும்
காண்பித்தேன்.
உண்மையில் அந்த நாவல் அவள் எழுத வேண்டியது. அவளுடைய கொள்ளுப்பாட்டனார் சம்பந்தப்பட்ட வரலாறுதான் அது. ஆனால் அவள் எழுதுவாளா என்று தெரியாது. என்னை எழுதச் சொல்வாள். இன்னும்சிலவிஷயங்கள்உள்ளன. புராணத்தில் கிருஷ்ணன் பாத்திரம் என்னை
மிகவும் வசீகரிப்பது பல வருஷங்களாக எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கும்
விஷயம் அதில் உண்டு. சொல்லமுடியாது, எழுதலாம்,
எழுதாமலும் போகலாம். அதையெல்லாம் கமிட் பண்ணிக்கொள்ளவே முடியாது.
கேள்வி
– புதிதாக நிறைய மொழிபெயர்ப்பாளர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்பினால் நீங்கள் என்ன
சொல்வீர்கள்?
பதில்
– புது எழுத்தாளர்களுக்கு சொல்வதற்கென்று எதுவும் கிடையாது. நான் சொன்னால் அவர்கள்
கேட்கப்போகிறார்களா, என்ன?
கேள்வி
– அதே நேரத்தில் உங்களுடைய சமகால மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கிறார்கள் அல்லவா? அவர்களைப்
பற்றி ஏதாவது சொல்லுங்கள்.
பதில்
– நிறையப் படிக்கவேண்டும். ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு அடிப்படைத் தேவை, தகுதி என்னவென்றால்
அவர் நல்ல கூரறிவுடைய வாசகராக இருக்கவேண்டும். இரண்டு மொழியிலும் அவர் திறமைசாலியாய்
இருக்கவேண்டும். மேலும் எல்லாவற்றையும் படிக்கவேண்டும். எல்லாவற்றையும் படிக்கவேண்டும்
என்றால் எல்லாவிதமான எழுத்துக்களையும் படிக்கவேண்டும். இரண்டு மொழியிலும் திறமைசாலியாய்
இருக்கவேண்டும் என்பதை நான் அழுத்திச் சொல்லக் காரணம், நிறைய மொழிபெயர்ப்புகளில் நான்
பார்க்கிற, பரிதாபத்துக்குரிய தவறுகள் என்னவெனில் idioms & phrases இவற்றையெல்லாம்
idioms & phrases என்று தெரிந்துகொள்ளாமலேயே அதை லிட்ரலாக மொழிபெயர்க்கும் அபத்தமெல்லாம்
இருக்கிறது. இந்த மாதிரியான பல உதாரணங்களை சொல்லலாம். நகைச்சுவையாகவே ஒரு கட்டுரை எழுதிவிடலாம்.
அது சம்பந்தப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களையெல்லாம் புண்படுத்துவது போல இருக்கும். நான்
ஒரு உதாரணம் சொன்னால், யார் அதை மொழிபெயர்த்தது என்று கொஞ்சம் கஷ்டப்பட்டால் கண்டுபிடித்துவிடலாம்.
யாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல. விஷயம்.
என்னுடைய மொழிபெயர்ப்பிலிருந்து கூட யாராவது கண்டுபிடித்து சொல்லலாம். நான்
மட்டும் தவறுகளுக்கு அப்பாற்பட்டவனா, என்ன? அப்படியெல்லாம் எதுவுமே இல்லை.
கேள்வி
– சமகாலத்தில் உங்களுடன் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருப்பவர்களைப் பற்றிய உங்கள் கருத்து
என்ன? அவர்களுடைய மொழிபெயர்ப்பைப் பற்றி அல்ல, இவர்கள் எல்லாம் மொழிபெயர்க்கிறார்கள்
என்பதைப் பற்றி. கண்டிப்பாக நீங்கள் அவர்களையெல்லாம் பார்த்திருப்பீர்கள்.
பதில்
– ஆமாமாம். ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளரும் ஒவ்வொரு மாதிரி. சத்தியமூர்த்தி ரூமியுடைய கவிதைகளை
மொழிபெயர்த்திருந்தார். மிகுந்த சிரத்தை எடுத்துப் பண்ணியிருந்தார். மிகவும் பிரமாதமான
மொழிபெயர்ப்பு. நான் மிகவும் மதிக்கும் மொழிபெயர்ப்பாளர். அதிகமாக அவர் பண்ணுவதில்லை.
கார்த்திகைப் பாண்டியன், கணேஷ் ராம் என்று நிறைய பேர் சின்சியராக மொழிபெயர்ப்பில் ஈடுபட்டுவருகிறார்கள்.
தமிழில் நிறைய மொழிபெயர்ப்பாளர்கள் வருவதே மிகவும் சந்தோஷமான ஒரு விஷயம்தான். ஒவ்வொரு
கல்குதிரை இதழ் வரும்போதும் அதில் எத்தனை புதிய மொழிபெயர்ப்பாளர்கள் வந்திருக்கிறார்கள்
என்று பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. நிறைய பெண்கள், லதா அருணாசலம், ஷாகிதா
இவர்களெல்லாம் மொழிபெயர்க்க வருகிறார்கள். முன்பெல்லாம் மொழிபெயர்ப்பில் சீனியர்ஸ்
அமரந்தா, லதா ராமகிருஷ்ணன் தவிர வேறு யாரும் பெரிய அளவில் இல்லை. இப்போது நிறைய பேர்
வருகிறார்கள். கடினமான உழைப்பும் அர்ப்பணிப்பும் முக்கியத் தேவைகள். வெறும் ஆர்வம் மட்டும் போதாது. ஏதோ கையில் கிடைத்தது, நான் பிரவுஸ் பண்ணிக்கொண்டிருக்கையில்
திடீரென்று ஒரு எழுத்தாளர் பற்றிய குறிப்பைப் பார்த்தேன். அதைக் கிளிக் பண்ணினால் அவர்
எழுதிய ஒரு கதை வந்தது. அதை நான் படித்தேன். அதை நான் மொழிபெயர்த்துவிட்டேன் என்பதெல்லாம்
சரியில்லை. நான் ஒரு எழுத்தாளரை மொழிபெயர்ப்பதாக இருந்தால் அந்த எழுத்தாளரைப் பற்றி
முழுமையாகத் தெரிந்துகொள்ளவேண்டும். இது நான் நம்புகிற விஷயம். எல்லாருக்கும் பொருந்தும்
என்றில்லை. கிட்டத்தட்ட அவர் எழுதிய எல்லாப் புத்தகங்களையும் நீங்கள் படித்திருக்க
வேண்டும். அவர் எப்படிப்பட்டவர் என்பது முழுமையாகத் தெரிந்திருக்கவேண்டும். அவருடைய
நடை, தொனி, உத்திகள் இவற்றை முற்றிலுமாக உள்வாங்கியிருக்கவேண்டும். ஏனென்றால் நான்
அப்படிதான் செய்வேன். நான் மொழிபெயர்த்திருக்கும்
அத்தனை எழுத்தாளர்களையும் முழுமையாக அறிந்துகொண்ட பிறகுதான் அவர்களுடைய படைப்புகளை
மொழிபெயர்த்திருக்கிறேன் என்று என்னால் உறுதியாக சொல்லமுடியும். Dag Solstad –க்கு
ஆங்கிலத்தில் நிறைய மொழிபெயர்ப்புகள் வந்திருக்கவில்லை. அவருடைய Shyness and
dignity-ஐ நான் மொழிபெயர்க்கும்போது நார்வேயில் அவர் மிகப் பிரபலமான எழுத்தாளராக
இருக்கலாம். ஆங்கிலத்தில் அவருடைய மூன்று புத்தகங்கள்தான் வந்திருக்கின்றன. அவை எல்லாவற்றையும்
வாங்கிப் படித்துவிட்டு, இணையத்தில் அவரைப் பற்றி வந்துள்ள குறிப்புகள், அவர் அளித்த
பேட்டிகள் என்று கிட்டத்தட்ட இருநூறு பக்கங்களை டவுன்லோட் செய்துவைத்துக் கொண்டு படித்து
முடித்த பிறகுதான் உடைந்த குடையை மொழிபெயர்க்கத் தொடங்கினேன்
கேள்வி – இலக்கியத்தை நீங்கள் ஒரு மொழிபெயர்ப்பாளராக மட்டும்
இல்லாமல் வாசகராகவும் தொடர்ந்து பார்த்துக்கொண்டு வருகிறீர்கள். தமிழிலக்கிய சூழல்
இப்போது எப்படி இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
பதில் – ப்ளஸ், மைனஸ் என இரண்டுமே சொல்லலாம். 90களுக்குப் பிறகு
ஒரு பெரிய மாற்றம் வந்தது. 90களின் ஆரம்பத்தில் வந்த உலகமயமாக்கல் தமிழ் வாசிப்பு தளத்திலும்
ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. என்னுடைய கல்லூரி நாட்களில் இதுபோல் சீரியஸ்
பத்திரிகைகள், சீரியஸ் லிட்டரேச்சர் என்பது மிக மிக சிறிய வட்டம். அது வெளியுலகத்தில்
யாருக்கும் தெரியவே தெரியாது. ஊரீஸ் கல்லூரியுடைய தமிழ் விரிவுரையாளர்களிடமே நான்
“சுந்தர ராமசாமி தெரியுமா உங்களுக்கு? அசோகமித்திரன் தெரியுமா? ஜி.நாகராஜன் தெரியுமா?”
என்றெல்லாம் வம்பு பண்ணிக்கொண்டிருப்பேன்.
மிகவும் ஃப்ரெண்ட்லியான லெக்சரர்ஸ் இரண்டு மூன்று பேர் இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம்
ஒருவரையுமே தெரியாது. நான் பிரசிடென்சியில் எம்எஸ்ஸி சேர்ந்தவுடனே முதல் வேலையாக தமிழ்த்துறைக்குச்
சென்று மு.மேத்தா -பாவம், நல்ல மனிதர் - அவரை தேவையில்லாமல் சீண்டுவேன். “நீங்க எழுதறதெல்லாம்
கவிதையே கிடையாது” என்பேன். விஷயம் என்னவென்றால் இந்த தீவிர இலக்கியம் என்பது யாருக்கும்
கண்ணுக்குத் தெரியாத ஒரு ரகசியக் குழு மாதிரி மிகவும் சின்ன வட்டத்தில் மட்டுமே இயங்கிவந்தது.
வெளியில் யார்க்கும் தெரியவே தெரியாது. வெளியில் மிகவும் ஜகஜோதியாக வெகுஜன இலக்கியவாதிகள்
எல்லார்க்கும் தெரிந்தவர்களாக இருந்தனர். பாக்கெட் நாவல்கள் வந்துகொண்டிருந்தன. சுஜாதா
எல்லாம் பெரிய ஸ்டார். பாலகுமாரன்.... ஹைய்ய்யோ..!
என்று நிறைய கல்லூரிப் பெண்கள் உருகிக் கொண்டிருப்பார்கள். இவர்களை எல்லாம் மிகவும் இளக்காரமாகப் பார்த்துக்கொண்டு,
தலையில் கொம்பு முளைத்த சின்ன குரூப் ஒன்று சுற்றிக்கொண்டிருந்தோம். தமிழ்நாட்டில்
மொத்தம் எத்தனை தீவிர இலக்கிய வாசகர்கள் இருப்பார்கள்?
ஒரு இரண்டாயிரம் பேர் இருப்பார்களா? என்று பேசிக்கொண்டிருப்போம். நிறைய பத்திரிகைகள் திடீர் திடீரென வரும். மீட்சி, பாலம், ழ,
கவனம், நிமிடம், கசடதபற இந்த
மாதிரியான மிகவும் முக்கியமான பத்திரிகைகள் கொஞ்சகாலம் தாக்குப் பிடிக்கும்.
பிறகு மறைந்துவிடும். இந்த மாதிரியான சூழல்தான் எப்போதுமே இருந்தது. ஆனால் ஒரு பத்திரிகை
எவ்வளவு காலம் நீடித்து நிலைத்து இருந்தது என்பதல்ல விஷயம். தமிழ் இலக்கிய உலகை உயர்த்திப்
பிடித்ததும், பல அற்புதமான படைப்பாளிகளை உருவாக்கியதும் இந்தச் சிறு பத்திரிகைகள்தான்.
வெகுஜன இதழ்கள் அல்ல. ழ, கவனத்திலெல்லாம் ஆத்மாநாம், ஞானக்கூத்தன் எழுதிய கவிதைகள்
எல்லாம் தமிழ்க்கவிதைகளுடைய landmark ஆக இருந்திருக்கின்றன. பிரம்மராஜன் செய்த விஷயங்கள்
எல்லாம் இருக்கே, வண்ணதாசனுடைய அற்புதமான கதைகளை எல்லாம் வெளியிட்டிருந்தார். எவ்வளவு
முக்கியமான எழுத்தாளர்களை எல்லாம் பிரம்மராஜன் அறிமுகப்படுத்தியிருந்தார். ஆனால் பிரம்மராஜன்
என்ற பெயரும், சுந்தர ராமசாமி எண்பதுகளின் கடைசியில் நடத்திய காலச்சுவடும் வெளியில்
யாருக்குமே தெரியவே தெரியாது. அசோகமித்திரன் அவ்வளவு பெரிய அற்புதமான எழுத்தாளர். உலக
எழுத்தாளர். அவர் பெயர் எத்தனைப் பேருக்குத் தெரியும்? தெரியவே தெரியாது. ஜேஜே சில குறிப்புகள் வந்தபொழுது ஒரு பெரிய அலை
ஏற்பட்டது என்று திருப்தியாக சொல்லிக் கொள்ளலாம். ஒரு பெரிய அலை என்றால் a storm
in the tea cup தான் அது. தமிழ்நாட்டில் இருக்கிற எல்லாருக்கும் ஜேஜே சில குறிப்புகள்
தெரிந்துவிட்டது என்று அர்த்தம் கிடையாது. சீரியஸ் இலக்கிய வட்டாரத்தில் பெரும் பாதிப்பு
ஏற்படுத்தியது. சாரு நிவேதிதா அதை விமர்சித்து அவர் ஒரு புத்தகமே போட்டார். இந்த மாதிரி
விஷயங்கள் எல்லாம் ஒரு சின்ன குழுவுக்கு நடுவில்தான் நடந்துகொண்டிருந்தது. இப்படிதான்
இருந்தது 90 வரைக்கும். 90-களுக்குப் பிறகு அரசியல்ரீதியாக பல விஷயங்கள் மாறின. புதிய
பொருளாதாரக் கொள்கை, உலகமயமாக்கல் அதெல்லாம் நடக்கும்போது தகவல் தொடர்பு சாதனங்கள்
இருக்கில்லையா, அதிலும் நிறைய மாற்றங்கள் வந்தன.
காட்சி ஊடகங்கள் பெரிய அளவில் உள்ளே வருகின்றன. பின்னாலேயே இணையம். உடனடி பாதிப்பு எதில் வருகிறது
என்றால் இந்த மாதிரி பொழுதுபோக்கு, மேம்போக்கான இலக்கியங்கள், வெகுஜன இலக்கியங்கள்
இவைதான் முதலில் பாதிக்கப்படுகின்றன. எப்படி என்றால் பாக்கெட் நாவல்கள் படித்துக்கொண்டிருந்தவர்களிடம்
திடீர் வீழ்ச்சி ஏற்படுகிறது. இன்னமும் பாக்கெட் நாவல்கள், மாமிகள் எழுதிய புத்தகங்கள்
எல்லாம் நிறைய விற்கின்றன என்று சொல்வார்கள். அதற்கென்று வாசகர்வட்டம் இருக்கிறது.
கிண்டிலில் கூட நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கின்றன. நாம் சும்மா
கிண்டலாக மாமி நாவல் என்று சொல்லிக் கொள்ளலாம், ஆனால் இந்த மாமி நாவல்கள் விற்கின்ற
எண்ணிக்கையைப் பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கும். இதெல்லாம் எங்கேயிருந்து இப்படி
விற்கிறது என்று. அது வேறு கதை. ஆனால் இப்போது நீங்கள் ஆனந்தவிகடனையே எடுத்துக்கொள்ளுங்க.
ஒரு நான்கு தொடர்கதை விகடனிலும் குமுதத்திலும் வந்துகொண்டிருக்கும். அந்த இடத்தை தொலைக்காட்சித்
தொடர்கள் replace பண்ணிவிட்டன. இப்போது வெகுஜனப் பத்திரிகைகளிலேயே ஒரு சிறுகதை, ஒரு
தொடர்கதை என content மாறிவிட்டது. Non-fiction அரசியல் கட்டுரைகள், விமர்சனங்கள் எல்லாம்
மாறிவிட்டன. நீங்கள் 1970s விகடன் ஏதாவது பழைய பிரதி இருந்தால் எடுத்துப் பாருங்க.
இப்போதுள்ள ஆனந்தவிகடன் எடுத்துப் பாருங்க. எத்தனைப் பல்சுவைக் கட்டுரைகள் இப்போதிருக்கும்
ஆனந்த விகடனில் இருக்கின்றன, 70-களில் எப்படி இருக்கின்றன என்று பாருங்க. குமுதத்தில்
முப்பத்தாறாம் பக்கம் மூலை என்று ஒன்று இருக்கும். மேலும் மேலும் சிறுகதைகள், தொடர்கதைகள்,
சரித்திரக் கதை அது மாதிரி எதுவுமே இல்லை. இது ஒரு பெரிய மாற்றம். இதற்கு காட்சி ஊடகங்கள்,
தொலைக்காட்சி வந்தது முக்கியக்காரணம். அடுத்தது இணையம். இணையம் வந்ததும் இலக்கிய உலகை
ஜனநாயகப் படுத்திவிட்டது. எப்படி என்றால் எங்களுக்கு மட்டுமே என்று சொந்தம் கொண்டாடிக்கொண்டிருந்த
இரண்டாயிரம் பேர் கொண்ட குழு இருக்கிறதல்லவா, அந்த குழுவுக்குள் நிறைய
encroachment வந்துவிட்டது. உண்மை அதுதான். எல்லாரும் எழுதுவது எல்லாருக்கும் தெரிய
ஆரம்பித்துவிட்டது. அதை நீங்க நல்லது என்றும் சொல்லலாம். கெட்டது என்றும் சொல்லலாம்.
அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது. சுந்தர ராமசாமியின் புத்தகங்களும்
அசோகமித்திரனின் புத்தகங்களும் எவ்வளவு விற்றிருக்கின்றன, அசோகமித்திரனுக்கு அது புரியவே
இல்லை. கவிதாவில் அவருடைய சிறுகதைத் தொகுப்பை இரண்டு வால்யூம்களாக போடப்போகிறேன் என்று
சொன்னபோது அவர் almost கவிதா சொக்கலிங்கத்தை கையைப் பிடித்துக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்,
“இந்த மாதிரியெல்லாம் பண்ணி கையை சுட்டுக்காதீங்க, இவ்வளவு விலை வித்தால் எங்கே என்
புத்தகங்கள் விக்கும்? விக்கவே விக்காது. லட்ச ரூபாய் முதலீடு செய்வீங்க போலிருக்கே,
வேண்டவே வேண்டாம்.” என்றார். “அதெல்லாம் விக்கும். நீங்க சும்மா இருங்க” என்று அடக்கிவிட்டு
அவர் அசோகமித்திரன் சிறுகதைகள் தொகுதி 1, 2 என்று போட்டார். மொத்தமும் விற்றுவிட்டன.
அடுத்தப் பதிப்புக்காக அவரிடம் ராயல்டியைக் கொடுத்துவிட்டுக் கேட்டபோது அசோகமித்திரன்
அதிர்ந்துவிட்டார். “என்னது, என் புஸ்தகம் அத்தனையும் வித்துடுச்சா? ஆயிரத்து இருநூறு
காப்பியும் வித்துடுச்சா? ஏன் இந்தமாதிரியெல்லாம் நடக்கறது?” என்றார். அவரால் அதைப்
புரிந்துகொள்ளவே முடியவில்லை. இன்றைக்கும் காலச்சுவடு பதிப்பகத்தில் ஒவ்வொரு வருஷம்
சென்னை புத்தகக் கண்காட்சியிலும் அதிகமாக விற்கிற நாவல்கள் புளியமரத்தின் கதையும் ஜேஜே
சில குறிப்புகளும்தான். சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் இந்தப் பெயர்களெல்லாம் ஒரு சிலர்
மட்டுமே அறிந்த பெயர்களாக இப்போது இல்லை. இப்போது நிறைய சீரியஸ் ரைட்டர்ஸ் எல்லாம்
blog எழுதுகிறார்கள். ஆனால் எனக்கு ஒரு தியரி இருக்கிறது. அதைக் கேட்டால் நிறைய பேருக்கு
கோபம் வரலாம். அதாவது இந்தத் தீவிர வாசகர்களுடைய சதவீதம் இருக்கிறதல்லவா, அது
always remains the same. மக்கள்தொகைக்குத் தகுந்தபடி அந்த இரண்டாயிரம் என்பது ஐந்தாயிரமாக
மாறியிருக்கலாம். ஜெயமோகனுடைய தளத்தைப் படிக்கிற எல்லாருமே நுட்பமான வாசகர்கள் என்பதை
நம்ப நான் தயாராக இல்லை. ஜெயமோகனே நுட்பமான எழுத்தாளரா என்பது அடுத்தக் கேள்வி. இப்போது
ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா எல்லோரும் இணையத்தில் எழுதுகிறார்கள். அவர்களுடைய பெயர்கள்
பிரபலமாக எல்லாருக்கும் தெரிகிறது. எல்லோரும் படிக்கிறார்கள். நல்ல விஷயம். ஆனால்
names-dropping இப்போது அதிகமாகிவிட்டது. உண்மையாகவே இப்போது இருக்கும் வாசகர்கள் சீரியல்
ரைட்டர்ஸ்களின் பெயர்களைத் தெரிந்துவைத்திருக்கும் அளவுக்கு உண்மையான ஆழ்ந்த வாசகர்களா
என்ற சந்தேகம் இருக்கிறது. ஆழமான வாசிப்பு
இல்லாமல் சும்மா விதண்டாவாதம் செய்கிறார்கள். அவர்கள் ஒரு வலைப்பூ ஆரம்பித்துக்கொள்கிறார்கள்.
அதில் என்னவோ எழுதுகிறார்கள். மிகவும் தெனாவெட்டாக பதிவுகள் போடுவது இதெல்லாம் பார்க்கும்போது
சீனியர்ஸ்க்கு சிரிப்புதான் வருகிறது. டேய் நீயெல்லாம் என்னடா, நானெல்லாம் எவ்வளவு
பெரிய ஆள் தெரியுமா என்பதெல்லாம் அர்த்தமே இல்லை. இது உலகளாவிய ஒரு விஷயம். ஒரு சீரியஸ்
புத்தகம் எல்லார்க்கும் கிடைக்கிறது என்றால் கிடைக்கட்டுமே. இன்டர்நெட் என்பதில் சாக்கடையும்
இருக்கிறது, அற்புதமான விஷயங்களும் நிறையக் கிடைக்கின்றன. அதே மாதிரிதான். ஃபேஸ்புக்கோ,
எதில் வேண்டுமானாலும் பாருங்க. நல்ல விஷயங்கள் வரும். மெஜாரிடி வேறு மாதிரிதான் இருக்கும்.
நீங்க தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கவேண்டும். வாசிப்பிலும் அதேதான். ஜெயமோகனை ஆசான்
என்று கொண்டாடி ஒரு பெரிய குரூப்பே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். சிரிப்பாக இருக்கிறது.
அவருக்கு அது தேவையாக இருக்கலாம். ஆனால் ஜெயகாந்தன் தன் வாசகர்களை சஹ்ருதயர்கள் என்றுதான்
சொன்னார். ஒரு எழுத்தாளனை பீடத்தில் வைத்து பாதாபிஷேகம் பண்ணுவதை எந்த ஒரு உண்மையான
எழுத்தாளனும் விரும்பமாட்டான். அந்த மாதிரி இருந்ததே கிடையாது. எந்த ஒரு எழுத்தாளனும்
மலைப்பிரசங்கம் பண்ண வந்த தேவதூதர்கள் கிடையாது. எழுத்தாளனுக்கு சமமானவன்தான் வாசகனும்.
அந்த புரிதல் இப்போது மாறிவிட்டது. Hero worship நிறைய வந்துவிட்டது. எழுத்தாளர்களை
Hero worship பண்ணினால் எனக்கு செம கடுப்பாகிறது. எழுத்தாளன் துதிக்கப்படக்கூடாது.
ஒரு வாசகன் எழுத்தாளனைத் தாண்டிப் போகவேண்டும். கையைக் கட்டிக்கொண்டு என்னுடைய குரு
இவர்தான், இவர் எழுத்து தவிர வேறு யாருடைய எழுத்தையும் படிக்கவே மாட்டேன் என்று சொன்னால்
அவன் ஒரு வாசகனே அல்ல. அவர்களையெல்லாம் ரசிகக் கூட்டமாகவே பார்க்கிறேன். இந்த மாதிரியான போக்கெல்லாம் இப்போது நிறைய இருக்கிறது. அதை
ஒன்றும் பண்ணமுடியாது. முக்கியமான நிறைய புத்தகங்களெல்லாம் மறுபதிப்பு காண்கின்றன.
எனக்கெல்லாம் காஸ்யபனின் அசடு மறுபடியும் மறுபதிப்பு காணும் என்ற நம்பிக்கையே இருந்ததில்லை.
அதெல்லாம் வந்திருக்கிறதே. சாகித்ய அகாடமி மாதிரியான தூங்கிவழிகிற பப்ளிஷர்ஸ் கூட டிமாண்டுக்காக
அவர்களுடைய பழைய நல்ல புத்தகங்களையெல்லாம் கொண்டுவருகிறார்கள். அக்னிநதியெல்லாம் இப்போது
வந்திருக்கிறது. டிமாண்ட் இருக்கிறது. நூறு பேர் ஒரு புத்தகத்தை வாங்குகிறார்கள் என்றால்
இரண்டு பேர் ஒழுங்காகப் படிப்பார்கள். 98 பேர் சும்மா வாங்கி, நானும் அக்னிநதி வைத்திருக்கிறேன்
என்று அலமாரியில் வைத்துக்கொள்வார்கள். அதையெல்லாம் ஒன்றும் பண்ண முடியாது. ஆனால் புதிதாக
இரண்டு வாசகர்கள் உள்ளே வருகிறார்கள் இல்லையா, பாசிடிவாகத்தான் நாம் பார்க்கவேண்டும்.
நானும் எல்லாம் தெரிந்தவன் என்பது போல் சில அரைகுறைகள் சத்தம் போட்டால் போடட்டுமே.
அரைகுறைகள் முழுதாக வளரமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? கொஞ்சநாள் துள்ளிக்கொண்டு
இருந்துவிட்டு, பிறகு ஒருவேளை அவர்களே முதிர்ச்சி அடைந்தவுடன் ஒழுங்கான வாசகர்களாக
மாறலாம். எழுத்தாளர்களாக வரலாம். வாய்ப்பு இருக்கிறதல்லவா? யாரையும் எள்ளி நகையாடி
அலட்சியப்படுத்திவிட முடியாது. ஃபேஸ்புக் மாதிரி இடங்களில் நிறைய சின்னப் பையன்கள்
ஒரேயடியாகத் துள்ளுவதைப் பார்க்கும்போது எனக்குக் கோபம் வருவதில்லை. நீ மெள்ள வாப்பா
என்று தோன்றும். வருவான், வரலாம்.
கேள்வி – மொழிபெயர்ப்பில் உங்களுக்கு ஆதர்சம் என்று யாராவது
இருக்கிறார்களா?
பதில் – இருக்கிறார்கள். நான் எப்போதுமே என்னுடைய முன்னத்தி
ஏர்கள் என்று ஆர்.சிவக்குமார், வெ.ஸ்ரீராம் இவர்கள் இருவரையும்தான் சொல்வேன். தேவதாஸ்
என்னுடைய மிக நெருங்கிய நண்பர். அவரை என்னுடைய Friend, philosopher and guide என்று
சொல்வேன். 90-லிருந்து அவர் எனக்குப் பழக்கம். அப்போது ஆரணியில் தேவதாஸ் இருந்தார் . நானும் அவரும்
கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் சந்தித்துக்கொள்வோம்.
அவருடன் நடந்த உரையாடல்கள் மிக முக்கியமானவை. மிக உன்னதமான மனிதர், பெரிய வாசிப்பாளி
. சிவக்குமாரும், வெ.ஸ்ரீராமும் நான் பின்பற்ற விரும்புகிற, விழைகிற என்னுடைய ஆதர்சங்கள்.
அடுத்து, மிகக்குறைவாக மொழிபெயர்த்திருந்தாலும் மிக அற்புதமான மொழிபெயர்ப்பாளர் சி.மணி.
வெ.ஸ்ரீராம் பிரெஞ்சிலிருந்துதான் பண்ணியிருப்பார். ஆனாலும் அவருடைய மொழிபெயர்ப்புகள்
எனக்குப் பல விஷயங்களைக் கற்றுத்தந்தன. அவருடைய சின்சியாரிடி, வெ.ஸ்ரீராமுடன் பழக்கம்
ஏற்பட்ட பிறகு அவருடன் பேசுவது, I love talking to him. ஆர். சிவக்குமார் என்னுடைய
குரு. இப்போது என் சந்தேகங்களுக்கு இவர்களிடம்தான்
செல்கிறேன்.
@@@@@@@
கருத்துகள்
கருத்துரையிடுக