நவீன ஆப்பிரிக்க இலக்கியம்: ஒரு பருந்துப் பார்வை

 

நவீனஆப்பிரிக்க இலக்கியம்: ஒரு பருந்துப் பார்வை

 

ஜி. குப்புசாமி

 

ஏகாதிபத்திய வரலாற்றாசிரியர்கள் உருவாக்கிய தேய்வழக்குகளை விசுவாசமாக நாமும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். இதன் அடிப்படையில் உள்ள பலதரப்பட்ட நுண் அரசியற் கூறுகள் இன்னமும்கூட நம்மால் முழுமையாகப் பகுப்பாய்வு செய்யப்படவில்லை எனலாம். 'இருண்ட கண்டம்' என்ற ஒரே சொல்லாட்சியின் கீழ் மறைக்கப்பட்டிருந்த உலகின் மூத்த குடியின் வேர்களும், அவர்களின் எண்ணற்ற கடவுளர்களும், இனக்குழுக்களின் பாரம்பரியங்களும் , கலாச்சாரங்களும் காலனியாளர்களால் அநாகரிகங்கள் என்ற பெயரில் அழித்ததையும், தம் நாட்டு மொழிகளையும் மதங்களையும் அவர்களின் மேல் திணித்ததையும், ஓர் இனமாக வாழ்ந்து வந்த அப்பழங்குடிகள் தமக்குள் பிளவுண்டதையும் புதைசேற்றிலிருந்து தோண்டியெடுக்கப்படும் புராதன பொருட்களைப் போல இன்றைய ஆப்பிரிக்கப் படைப்புகள் மீட்டெடுத்து வருகின்றன.

 

தென் அமெரிக்காவைப் போலவே ஆப்பிரிக்கக் கண்டமும் ஐரோப்பிய ஆதிக்க நாடுகளால் காலனியாக்கம் செய்யப்பட்ட பூமி. பாரம்பரியம் மிக்க ஆப்பிரிக்கச் சமூகத்தின் மீது மேற்கத்தைய வழக்கங்களும் மதிப்பீடுகளும் ஏற்படுத்திய தாக்கங்களை நுட்பமாகக் கலையம்சத்துடன் சித்திரிக்கும் நவீன ஆப்பிரிக்க இலக்கியத்தின் வரலாறு சினுவா ஆச்செபேவுடன் தொடங்குகிறது. ஜாய்ஸ் கேரியின் Mister Johnson போன்ற, வெள்ளையர்களால் கீழ்த்தரமாகவும் இழிவாகவும் சித்திரிக்கப்பட்ட ஆப்பிரிக்கப் பின்னணி நாவல்களிலிருந்து ஆச்செபேவின் Things fall Apart முற்றிலும் விலகி உண்மையான ஆப்பிரிக்காவை, அதன் கம்பீரத்தை, பெருமிதத்தை, வலியை அவமானத்தைத் துல்லியமாகக் காட்சிப்படுத்தியது. (இந்நாவல் சிதைவுகள் என்ற பெயரில் 'காலம்' வெளியீடாக வெளிவந்துள்ளது. மொ.பெ. என்.கே. மகாலிங்கம்). சினுவா ஆச்செபேவை மட்டுமின்றி அவர் பிறந்த நைஜீரியாவைச் சேர்ந்த பென் ஓக்ரி, வோலே சொயிங்கா, சீமமாண்டா அடீச்சி போன்றோரின் படைப்புகளையும் சரியாக உள்வாங்கிக் கொள்ள நைஜீரியாவின் உள்நாட்டுப் போர்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும். 1992 வரை அதன் இயற்கை வளங்களுக்காகச் சிறுபான்மை வெள்ளையர்களின் இனவெறி ஆட்சியின் கீழ் ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென் மேற்குப் பகுதி நாடான நைஜீரியா சிக்கியிருந்தது. நைஜீரியாவில் உள்ள பல்வேறு இனக் குழுக்களில் இக்போ இனத்தவர் பெரும்பான்மையாக வாழும் பையாஃப்ரா நைஜீரியாவிலேயே செழிப்பான பிரதேசம்.  இக்போ இனத்தவர் பல்லாண்டுகளாகவே தனிநாடு கோரி போராடி வந்தாலும் 1967ல் வெடித்த உள்நாட்டுப் போரில் பெரும் ரத்தச் சேதத்திற்குப் பின் பையாஃப்ரா என்ற தனி நாடு உருவாகியது. சிந்திய ரத்தம் உலர்வதற்கு முன் மூன்றே ஆண்டுகளில் அமெரிக்க உதவியுடன் நைஜீரியா அப்புதிய நாட்டைக் கையகப்படுத்திப் பழையபடியே இணைத்துக் கொண்டது.  பையாஃப்ராவின் வடுக்கள் நைஜீரியர்களிடம் இன்னும் மறையாதிருக்கின்றன என்பதற்குச் சாட்சி ஆச்செபே, அடீச்சி போன்றோரின் படைப்புகள்.

 

நவீன ஆப்பிரிக்க இலக்கியத்தைப் பற்றி எழுதும் போது நைஜீரிய இலக்கியமே அதில் பெரும்பான்மையான இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறது. நைஜீரிய ஆங்கில இலக்கியம் கடந்த பதினைந்து ஆண்டுகளில் விஸ்தீரணமடைந்திருப்பதே அதற்குக் காரணம். கருப்பு ஆப்பிரிக்க இலக்கியத்தின் முன்னணிக் கலைஞரான வோலே சொயிங்காவிற்கு 1986ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தபோது அது நைஜீரிய இலக்கியத்திற்கான அங்கீகாரத்தை உறுதிப்படுத்தியது.

 

காலனியாதிக்கத்திலிருந்து, நவ காலனீயத்தின் வழியாக முழுமையான சுயராஜ்ஜியத்திற்குப் பெரும் வலியோடு உருமாறிக் கொண்டிருந்த ஒரு தேசத்தின் போராட்டங்களை இன்றைய நைஜீரிய இலக்கியம் வெளிப்படுத்துகிறது. பையாஃப்ரா யுத்தம் முடிந்தவுடனேயே எதிர்பாராத வகையில் நைஜீரியாவில் புதைந்திருந்த எண்ணெய் வளம் வெளிச்சத்திற்கு வந்தது. இப்புதிய செழிப்பின் கவர்ச்சி உருவாக்கிய சமுதாய, அரசியல் ஒழுங்குலைவுகளிலிருந்து அத்தேசம் இன்று வரை மீண்டெழாதிருப்பதால் இன்றைய புதுப் பணக்காரச் சமூகத்தின் குரூரமான சுயநலப் பாங்கிற்கெதிரான எதிர் விளைவாகவே இன்றைய நைஜீரிய இலக்கியம் உருவாகியிருக்கிறது.

 

நைஜீரியாவின் ‘எதிர்ப்புக் கவிதை' மரபு ஒகிப் போவின் Path of Thunder என்ற கவிதையோடு தொடங்குவதாகக் கூறப்படுகிறது. அதுவரை ‘சுயத்தோடு’ நடத்தும் போராட்டங்களையும், தனிப்பட்ட இழப்புகளையும் நெக்குருக எழுதி வந்த நைஜீரியக் கவிதைகள் இனக்கொடுமைக்கும் பேரினவாதிகளின் சுரண்டலுக்கும் எதிரானதாக மாறி 1960களின் மத்தியில் வெடித்த உள்நாட்டுப் பிரிவினை யுத்தத்தை வந்தடைந்தது. இதே யுத்தம்தான் ஓகிப்போவையும் பலி கொண்டது.

 

தற்போது வாழ்ந்து வரும் நைஜீரியக் கவிஞர்களில் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் இயங்கி வருகின்றனர். இவர்களில் எவராலும் எதிர்ப்பு மரபிலிருந்து விலகிச் செல்ல முடியவில்லை என்பதையும் பார்க்கிறோம். முதல் தலைமுறையைச் சேர்ந்த சொயிங்காவிடம் ஆப்பிரிக்கக் கண்டம் முழுவதையும் அரவணைத்துச் செல்லும் பார்வை வெளிப்படுகிறது. நைஜீரியாவின் பிற ethocentric எழுத்தாளர்களிலிருந்து சொயிங்கா மாறுபட்டவர். 1975ல் தென் ஆப்பிரிக்காவின் இனவெறியாட்சிக்கு எதிராக மொஸாம்பிக் போர் அறிவித்த போதும், ரோபன் தீவில் புரோமெதீயஸ்போல நெல்சன் மண்டேலா கால்விலங்கிடப்பட்டிருந்த போதும் அவர் எழுதிய கவிதைகள் உக்கிரமானவை.

 

இரண்டாம் தலைமுறைக் கவிஞர்களின் எதிர்ப்புக் குணம் ஓடியா ஒஃபெய்முன், நியி உசுந்தேர் ஆகியோரின் கவிதைகளில் வகைமுறைப்படுகின்றது. இருவருமே சமரசமற்ற மார்க்ஸிஸ்டுகள், பாட்டாளி மக்கள் நலனும் அவர்களின் விடுதலையும் மட்டுமே தமது கலைக் கோட்பாடு என்றிருப்பவர்கள். இருந்தும், அவர்களின் கவிதைகள் பிரச்சாரங்களாகவோ கொள்கை முழக்கங்களாகவோ இல்லாமல் கலையெழுச்சி மிக்கனவையாக இருக்கின்றன.

 

மூன்றாம் தலைமுறையில் ஹாரி கரூபா, அஃபாம் அக்கீஹ், சீசன் அஜாயி போன்ற இளங்கவிஞர்களின் பெயர்கள் எதிர்காலத்தில் பரவலாகப் பேசப்படும் என்று விமரிசகர்கள் நம்புகின்றனர்.

 

உரைநடையில் கடந்த இருபதாண்டுகளில் வெளிவந்த முக்கிய நாவல்களாக சினுவா ஆச்செபேவின் 'சவானாவின் எறும்புப் புற்றுகள்' (Anthills of the Savannah) கோலே ஓமோடோஸோவின் ’விடிவதற்கு சற்று முன்னால்’ (Just before Dawn) ஆகியவற்றைக் கூற வேண்டும். ஆப்பிரிக்க இலக்கியத்தின் போக்கையே மாற்றியமைத்த தன் பிரசித்தி பெற்ற நாவலான Things fall Apart வெளிவந்து முப்பதாண்டுகள் கழித்து ஆச்செபே எழுதிய நாவல் சவானா' அவரது தேசத்தின் அரசியலில் பல வருடங்களாக நிலவி வந்த ராணுவக் குறுக்கீடுகள் மனிதத்துவத்திற்கு ஏற்படுத்திய பின்னடைவுகளைக் கையாளுகிறது. ஆச்சிபியின் மற்றொரு பிரசித்தி பெற்ற மற்றொரு நாவலான No Longer at Ease தமிழில் மகாலிங்கத்தின் மொழி பெயர்ப்பில் ‘வீழ்ச்சி' என்ற தலைப்பில் (காலம்) வெளிவந்துள்ளது. ஓமோடோஸோவின் நாவல் உண்மைச் சரித்திர, கற்பனைக் கூறுகளைப் பின்னிப் பிணைந்து, பிரிட்டிஷ் அதிகாரிகளால் மட்டுமல்லாது சுதந்திரம் கிடைத்த பின் தமக்குக் கிடைக்கப்போகும் சந்தர்ப்பங்களை எதிர்பார்த்துச் சச்சரவிடும் அரசியல்வாதிகளாலும் இன்றைய நைஜீரியா எப்படி சூறையாடப்படுகிறது என்று சித்திரிக்கிறது.

 

ஆச்செபே, ஓமோடோஸோவின் சாதனைகள் 70களில் புதிய புயலாக எழுதப் புகுந்த பென் ஓக்ரியின் தீவிரச் செறிவின் முன் மங்கத் தொடங்கின. ஓக்ரி  Flowers and Shadows என்ற தனது முதல் நாவலை 19வது வயதில் எழுதினார். இந்நாவலும், அடுத்து வந்த The Landscabe Withinம் அவரது தலைமுறையின் விரக்தியையும், அந்நியமாதலையும் காட்டுகின்றன. ஓக்ரியின் பாணி கார்ஸியா மார்க்கேஸ், சல்மான் ருஷ்டியைப் போல மாய யதார்த்த வகைமைக்கு நெருக்கமாக வருவது. 1991ல் அவரது நாவல் The Famishedக்காக புக்கர் பரிசை வென்றது.

 

சர்ரியலிசமும் நகைச்சுவையும், அபூர்வமான கற்பனையும் கலந்து எழுதப்பட்ட The Man Who Came From Back of Beyond மற்றும் Sympathetic Undertaken என்ற இரு நூல்களை எழுதியுள்ள இன்றைய புதிய எழுத்தாளர் பியி பாண்டேலி - தாமஸ் எதிர்காலத்தில் மிக முக்கியமான படைப்பாளியாக காணப்படுவார் என்று நம்பப்படுகிறது.

 

கடந்த இருபதாண்டுகளாகத்தான் பெண் எழுத்தாளர்கள் நைஜீரியாவில் வரத் தொடங்கியிருக்கின்றனர். புளோரா ந்வாபா, புச்சி இமிசீட்டா, அடாவ்ரா உலாஸி, இஃபியோமா ஓகேயே, ஸேநாப் அல்கலி போன்ற அதிகம் பொருட்படுத்தத் தகாத படைப்பாளிகளுக்குப் பின் உக்கிரமான ஆச்சிபி, ஸொயிங்கா, ஓக்ரி போன்றோருக்கு இணையான ஆளுமைகள் தோன்றத் தொடங்கியிருக்கின்றனர். 1977ஆம் ஆண்டு பிறந்த சீமமாண்டா ந்கோஸி அடீச்சி விரைவிலேயே இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவராக மதிக்கப்பட்டு, இலக்கிய உலகின் எல்லா உயரிய விருதுகளையும் பரிசுகளையும் பெறுவார் என்று நான் அனுமானிக்கிறேன். பையாஃப்ரா சம்பவங்களில் நேரடி அனுபவம் அடீச்சிக்கு கிடையாது. அப்போது அவர் பிறந்திருக்கவேயில்லை. அதனால் என்ன? அந்த இக்போ இனத்தவரின் சரித்திரத்தில் படிந்திருக்கும் ஆழமான வடுக்கள் இவரது Purple Hibiscus, Half of a Yellow Sun என்ற இரு  நாவல்களில் வெளிப்படுவது போல் வேறெந்த நைஜீரியப் படைப்பிலும் வெளிப்படவில்லை. இவரது சிறுகதைகளும் நாவலுக்கிணையான வீரியம் மிக்கவை.

 

 

அடீச்சியைப் பற்றிப் பேசும்போது ஏறக்குறைய அவருக்கிணையாகக் குறிப்பிட வேண்டிய எழுத்தாளர் ஸெஃபி ஆட்டா. 2006ஆம் வருடம் வெளிவந்த இவரது முதல் நாவல் Everything Good Will Come ஆப்பிரிக்க இலக்கியத்திற்கான ஸொயிங்கா விருதை வென்றிருக்கிறது.

 

சிகோஸி ஒபியோமா என்ற இளம் எழுத்தாளரின் பெயர் சில வருடங்களுக்கு முன் வெளிவந்த An Orchestra of Minorities என்ற அற்புதமான நாவலின் மூலம் உலக இலக்கிய அரங்கில் கவனம் பெற்றது. இறந்த ஒருவரின் ஆவியின் குரலில் ஒலிக்கும் இந்நாவல் இக்போ இனத்தவரின் பண்டைய கலாச்சாரக்கூறுகளை மீட்டெடுக்கிறது.

 

நைஜீரிய எழுத்தாளர்களைப் பற்றி எழுதும்போது, நைஜீரிய தாய்க்கும் கானாவைச் சேர்ந்த தந்தைக்கும் லண்டனில் பிறந்து ஆங்கிலேயக் குடியுரிமையைப் பெற்றிக்கொண்டு, ஆப்பிரிக்க அரசியல், புலம்பெயர்ந்திருக்கும் ஆப்பிரிக்கர்களின் பிரச்சனைகள், எளிய ஆப்பிரிக்கர்கள் இழந்துவரும் அடிப்படை உரிமைகள் இவற்றைப்பற்றி எழுதிவரும் ஸையே ஸெலாஸி என்ற இளம் எழுத்தாளரைப் பற்றியும் முக்கியமாகக் குறிப்பிடவேண்டும். Afropolitan என்ற புதிய சொல்லாடலை தனது ‘Bye-Bye, Baber’ என்ற கட்டுரையின் மூலம் அறிமுகப்படுத்தியவர் ஸெலாஸிதான்.

 

 

கானா நாட்டைச்சேர்ந்த நானா டார்கோவா செகியாமா, சமீபத்தில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கும் எழுத்தாளர். இவருடைய நூல்கள் சில முக்கிய விருதுகளைப் பெற்றிருந்தாலும், புனைவெழுத்தைவிட களப் போராட்டங்களில் அதிகமும் பங்களித்து வருபவர். ஆப்பிரிக்கப் பெண்களுக்கான தன்னுரிமைப் போராட்டங்களை வழிநடத்திச் செல்பவர்.  

 

NoViolet Bulawayo என்ற விநோதமான புனைபெயரில் எழுதும் ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த எலிசபெத் ஜாண்டைல் ட்ஷேலே, இப்போது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டுவரும் எழுத்தாளர். We Need New Names என்ற இவரது புகழ்பெற்ற நாவல் மேன் புக்கர் விருதுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்றது. இவரும் ஓர் புலம்பெயர்ந்த எழுத்தாளர்தான். அமெரிக்காவில் குடியேறிவிட்டாலும் தன்னுடைய ஆப்பிரிக்க வேர்களை இழக்க முடியாமலிருக்கும் தவிப்பை அற்புதமாக இந்நாவலில் சித்தரித்துள்ளார்.

 

ஆப்பிரிக்க இலக்கியத்தில் நைஜீரியாவுக்கு அடுத்த  பங்களிப்பு தென் ஆப்பிரிக்காவிற்கு. நோபல் பரிசு பெற்ற ஜே.எம்.கூட்ஸி, நாடின் கார்டிமர் ஆகியோர் முதலில் நினைவிற்கு வரும் பெயர்கள். மற்ற ஆப்பிரிக்க நாடுகளின் இலக்கியங்களைப் போலவே தென் ஆப்பிரிக்கப் படைப்புகளிலும் அரசியல்

வேரூன்றியிருக்கிறது தென் ஆப்பிரிக்காவின்  சிறுபான்மை வெள்ளையரின் ஆட்சிக் காலத்தில்  நிலவிய இனவெறி, துவேஷம், சுரண்டல்கள் அதன்பின் தொண்ணூறுகளின் துவக்கத்தில் மாறத் தொடங்கிய அரசியல் வானிலை, நெல்சன் மண்டேலா விடுதலை, முதன் முறையாகப் பொதுத் தேர்தல்கள், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் ஆட்சி என்ற அதன் சமூகத்தில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்ட அடுத்த கட்டம், அதற்கு அடுத்த கட்டத்தில் அதிகார வர்க்கமாக இருக்கும் கருப்பினத்தவர் இப்போது சலுகை வட்டத்திற்கு வெளியே தள்ளப்பட்ட சிறுபான்மை வெள்ளையர் மீது நிகழ்த்தும் வன்முறை, ஆக்கிரமிப்பு எனக் கடந்த இருபதாண்டுகளை மூன்று கட்டங்களாகத் தென் ஆப்பிரிக்காவின் சமீபகால வரலாற்றைப் பிரிக்கலாம். இதே காலவரிசையில் Waiting for the Barbarians, Life and Times of Michael K,  Disgrace போன்ற ஜே.எம்.கூட்ஸியின் நாவல்கள் இம்மூன்று கால கட்டங்களைப் பதிவு செய்கின்றன. இவற்றில் ‘மைக்கேல் கே' தமிழின் மூத்த மொழி பெயர்ப்பாளர்  திரு. நா. தர்மராஜனால் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. தன் ஆதர்ஸமான தஸ்தயேவ்ஸ்கியைப் பாத்திரமாக்கி கூட்ஸி எழுதிய மற்றொரு மிக உன்னதமான நாவலான The Master of Petersburg சா. தேவதாஸ் அவர்களால் ‘பீட்டர்ஸ்பர்க் நாயகன்' என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

 

இனி வடக்கு நோக்கிப் பயணிக்கலாம். உலகின் இரண்டாவது மிகப் பெரிய நிலப்பகுதியான ஆப்பிரிக்கா புவியியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வெவ்வேறு இயல்புகளுற்ற பிரதேசங்களால் அடுக்கப்பட்டுள்ளது. அல்ஜீரிய, பிரெஞ்சு காலனியாதிக்கத்தில் (1830 - 1962) இருந்த இஸ்லாமிய நாடு பேசும் மொழிகள் அரபியும், பெர்பெர் என்ற வட்டார மொழியும். ஆனால் பிரெஞ்சு மொழி காலனிய கால கட்டத்தில் ஆட்சி மொழியாக ஆக்கப்பட்டது. அல்ஜீரியா என்றாலே நினைவிற்கு வரும் எழுத்தாளர்களின் பெயர் அஸ்ஸியா ஜெபார் (Assia Djebar). ஃபாத்திமா ஜோஹ்ரா இமாலயீன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் பிரெஞ்சில்தான் எழுதுகிறார். இவரது முதல் நாவல் La soif (தாகம்) 1957ல் வெளிவந்தது. பிரான்ஸின் ஆதிக்க அரசியலில் அல்ஜீரியா தன் அடையாளங்களைப் பறிகொடுத்திருப்பதை அரபியும் பெர்பெரும் பிரெஞ்சும் கலந்த கலவையான, ஆனால் சுயமானதொரு மொழியில் எழுதுகிற அஸ்ஸியா ஜெபார் அரசியற் காரணங்களுக்காகத் தன் சொந்த நாட்டிலிருந்து வெளியேறி, பிரான்சிலும் அனுமதி மறுக்கப்பட்டு தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இலக்கியம் மட்டுமின்றித் திரைப்படங்களிலும் கால் பதித்த ஜெபார் 1976ஆம் வருடம் La Nouba desfemmes du Mont Chenoua (செனூவா மலைப் பெண்களின் பாடல்) என்ற நீளமான பெயர் கொண்ட திரைப்படத்தை எழுதி இயக்கினார். வெனிஸ் பட விழா விருதினைப் பெற்ற திரைப்படம் இது. தற்போது எழுத்தை விட திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்துபவராகியுள்ளார்.

 

ஆப்பிரிக்க எழுத்துக்களை – குறிப்பாக அல்ஜீரியாவைப் பற்றி எழுதும்போது தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வரும் பெயர் ஆல்பெர் காம்யு. நாம் காம்யுவை பிரெஞ்சு எழுத்தாளராகவே அடையாளப்படுத்தி வந்தாலும் அவரது புகழ்பெற்ற ‘அந்நியன்’ அல்ஜீரியாவில் நடக்கும் கதைதானே?

 

‘அந்நியன்’ நாவலுக்கு எதிர்வினையாக அல்ஜீரிய எழுத்தாளர் காமெல் தாவுத் எழுதியுள்ள ‘மெர்சோ: மறுவிசாரணை’ பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த அல்ஜீரியாவின் அராபியர்களின் குரல்.

 

எகிப்து உலக அதிசயத்தையும், உலகின் மிகப் பழமையான நாகரிகச் சின்னங்களையும் மட்டும் கொண்டிருக்கும் நாடு அல்ல. நாகிப் மாஃபௌஸ் என்ற அற்புதமான எழுத்துக்கலைஞனையும் உருவாக்கிய நாடு. நோபல் பரிசின் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்த இவருடைய நாவலில் ஒன்று தமிழிலும் சா.தேவதாஸ் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது ( அராபிய இரவுகளும் பகல்களும்.)

 

பல நூறு இனங்களையும் கலாச்சாரங்களையும் உள்ளடக்கியுள்ள மாபெரும் நிலப்பரப்பு ஆப்பிரிக்கா. அதன் வலிமை அக்கண்டத்தின் புராதன குல மரபுகளில் பொதிந்திருக்கிறது. பொதுவாக எந்த ஆப்பிரிக்க நாவலை, சிறுகதையை வாசித்தாலும் அவற்றின் களத்தோடு நம்மால் நெருக்கமாக உணர முடிவதற்கும், பாத்திரங்களின் பெயர்களையும் இடங்களின் பெயர்களையும் நீக்கி விட்டால் நமக்குப் பரிச்சயமான இந்திய - ஏன், தமிழ்நாட்டுக் கதைகளைப் படிப்பதைப் போன்றே தோன்ற வைப்பதற்கும் காரணம் நம்மிரு கண்டத்தவருக்கும் கலாச்சார ரீதியில் கூட அதிகம் வித்தியாசமில்லை என்பதுதான். மனித உறவுகளும் அவற்றின் மதிப்பீடுகளும் இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் ஒன்று போலவே இருப்பதற்கு, உலகின் மூத்த குடியின் வழிவந்த இனம் என்பதுதானே  காரணமாக இருக்கமுடியும்?

 

 

உதவிய நூல்கள்:

1. Contemporary African Short Stories Edited by Chinua Achebe

2. Half of a Yellow Sun by Chimamanda Ngozi Adichie

3. Purple Hibiscus by Chimamanda Ngozi Adichie

4. சிதைவுகள் சினுவா ஆச்சிபி, காலம் வெளியீடு.

5. வீழ்ச்சி சினுவா ஆச்சிபி, காலம் வெளியீடு.

6. WWW.emeagwali.com.

கருத்துகள்

  1. சார் முழுமையாக வாசித்துவிட்டேன். மிகவும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  2. பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டமாக வைக்கலாம்! வாழ்த்துக்கள் சார் 👌🏼

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாணவனின் மனைவி

எட்கார் கெரெட் - குறுங்கதைகள்

ஒரு சின்ன நல்ல விஷயம் - ரேமண்ட் கார்வர்